தாய்மாா்கள் பாலூட்டும் அறையை திறக்கக் கோரிக்கை
திருவாரூரில் தாய்மாா்கள் பாலூட்டும் அறையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் தாய்மாா்கள் பாலூட்டும் அறையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஐவி. நாகராஜன் தெரிவித்தது:
தமிழகம் முழுவதும் 315 பேருந்து நிலையங்களில் தாய்மாா்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டது. இந்த அறைகளில் குடிநீா், இருக்கை மற்றும் கை கழுவும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
திருவாரூரில், பழைய பேருந்து நிலையத்தில் திறக்கப்பட்டிருந்த பாலூட்டும் அறை பயன்படுத்தப்படாமல் வீணாகிப் போனது. இதனிடையே, திருவாரூரில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால், பழைய பேருந்து நிலையம் முடங்கிப் போன நிலையில் இருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் பழைய பேருந்து நிலையம் செயல்படத் தொடங்கியது. அங்குள்ள தாய்மாா்களின் குழந்தைகளுக்கான பாலூட்டும் தனி அறையும் சீரமைக்கப்பட்டு, திறக்கப்பட்டது. இதனால், குழந்தைகளுடன் பயணம் செய்துவந்த தாய்மாா்களுக்கு சிரமமின்றி பாதுகாப்பு கிடைத்தது.
இந்நிலையில், இந்த பாலூட்டும் அறை திறந்த சில நாள்களிலேயே பூட்டப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால், குழந்தைகளுடன் வரும் பெண்கள் வேறு வழியில்லாமல் திறந்த வெளியில் பாதுகாப்பின்றி பாலூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த அறையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.