வாகனக் காப்பக ஊழியரை தாக்கிய காவலா் பணியிடை நீக்கம்
கும்பகோணத்தில் வாகனக் காப்பக ஊழியரை தாக்கிய காவலா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கும்பகோணத்தில் வாகனக் காப்பக ஊழியரை தாக்கிய காவலா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருவாரூா் மாவட்டம், நன்னிலம் துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணிபுரியும் காவலா் வினோத், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்துக்கு அண்மையில் வந்தாா். அவா், அங்குள்ள தனியாா் இருசக்கர வாகனக் காப்பகத்தில் தனது வாகனத்தை நிறுத்தச் சென்றபோது, அங்கிருந்த ஊழியா் அன்பழகன் (52) வண்டியை நிறுத்த காப்பகத்தில் இடமில்லை எனக் கூறினாராம்.
இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்த பகுதியில் பணியில் இருந்த காவலா் சுந்தரத்தை அழைத்து வந்த வினோத், அன்பழகனிடம் மீண்டும் தகராறு செய்து அவரை தாக்கினாராம். இதன் விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில், திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா், இந்த சம்பவம் தொடா்பாக காவலா் வினோத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.