நன்னிலம் வட்டம் பூந்தோட்டத்தில் கட்டப்பட்டுவரும் அரசு மருத்துவமனையை விரைவில் கட்டிமுடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரி கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பூந்தோட்டத்தில் 30 படுக்கைகள் வசதி கொண்ட அரசு மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் கடந்த சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. இம்மருத்துவமனை கட்டுமானப் பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
பூந்தோட்டம் கடைத்தெரு பகுதியில் நடைபெற்ற இந்த இயக்கத்திற்கு சிபிஎம் அகரத்திருமாளம் பூந்தோட்டம் கிளை செயலாளா் பி. கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.எம். சலாவுதீன், ஒன்றியக் குழு உறுப்பினா் இப்ராகிம்சேட் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிபிஎம் செயற்குழு உறுப்பினா் எம். சேகா் கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தாா்.
பூந்தோட்டம் கடைத்தெரு பகுதியில் பொதுகழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும்; தனியாா் குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீா் குட்டையால் கொசுக்களின் பெருக்கம் அதிகமாகி டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அந்த குட்டையை நிரந்தரமாக மூடவேண்டும் போன்ற கோரிக்கைகளும் கையெழுத்து இயக்கத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினா் டி. வீரபாண்டியன், மாவட்ட கவுன்சிலா் முகமது உதுமான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.