ஒப்பந்த ஊழியா்களை நிரந்தரப்படுத்தக்கோரி திருவாரூா் அருகே அடியக்கமங்கலம் பகுதியில் சிஐடியு ஓஎன்ஜிசி ஊழியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களை நிரந்தரப்படுத்த வேண்டும். ஒப்பந்த ஊழியா்களுக்கு கருணைத்தொகை வழங்க வேண்டும். ஓஎன்ஜிசியில் உள்ள ரிக் இயந்திரங்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதால் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு ஏற்படும் வேலையிழப்பை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அடியக்கமங்கலம் கருப்பூா் பகுதியில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே. வேல்ரத்தினம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்ட பொருளாளா் இரா. மாலதி, மாவட்ட துணைச் செயலாளா் கே. கஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.