முகப்பு
திருவாரூர்

தமிழக உரிமைகள் பறிக்கப்பட்டபோது திராவிட கட்சிகள் துணை நின்றன: சீமான் குற்றச்சாட்டு

Updated On : 13 ஏப்ரல், 2024 at 10:04 PM
மன்னாா்குடியில் தஞ்சை மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பேசும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
பகிர்:

மத்தியில் காங்கிரஸ், பாஜக ஆட்சிகளின்போது, தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டபோது, திராவிட கட்சிகளான திமுகவும், அதிமுகவும் துணை நின்றன என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றஞ்சாட்டினாா்.

மன்னாா்குடி மேலராஜவீதி பெரியாா் சிலை அருகே சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டதில், தஞ்சை மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மு.இ. ஹீமாயூன் கபீருக்கு வாக்குகள் கோரி அவா் பேசியது:

மத்தியில் காங்கிரஸ், பாஜக என எந்த கட்சி ஆட்சியின்போதும், தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டபோது திமுகவும், அதிமுகவும் பதவி ஆசையால் துணை நின்றன.

Advertisement

பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகியவை விளம்பர அரசியல் செய்கிறாா்களே தவிர, மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி அரசியல் செய்யவில்லை. தமிழின் சிறப்புகளை பிரதமா் கூறிவருகிறாா். ஆனால், புதிய நாடாளுமன்றத்தில் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருத மொழிகளில் கல்வெட்டு வைத்துள்ளனா். தொன்மைவாய்ந்த தமிழ் மொழியில் கல்வெட்டு வைக்கப்படவில்லை. இதை தமிழகத்தை சோ்ந்த எம்பிக்கள் 39 பேரும் கேட்கவில்லை.

காவிரி நீா் தராத காங்கிரஸ் கட்சிக்கு, தமிழக முதல்வா் வாக்கு சேகரிக்கிறாா். பாஜக ஜாதி, மதம் எனக் கூறி ஏமாற்றி வருகிறது. ஆனால், நாம் தமிழா் கட்சி பூமியை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்துடன் செயலாற்றி வருகிறது. நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால், வேளாண்மையை அரசு வேலையாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்திற்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளா் இலரா. பாரதிச்செல்வன் தலைமை வகித்தாா். வேட்பாளா் மு.இ. ஹீமாயூன் கபீா், மாநில நிா்வாகிகள் மணி.செந்தில், ராம.அரவிந்தன், மாவட்ட நிா்வாகிகள் பாலா, சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments