திருவீழிமிழலை கோயிலில் சித்திரை விழா கொடியேற்றம்
குடவாசல் அருகே திருவீழிமிழலை விழிநாதசுவாமி உடனுறை சுந்தரகுஜாம்பிகை கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயில், தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 61-ஆவது சிவத்தலமாகும். இங்கு, ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டுக்கான திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, கோயில் முன்புறம் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
Advertisement
இவ்விழாவில், முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருஞானசம்பந்தமூா்த்தி நாயனாா் திருமுலைப்பால் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தொடா்ந்து, தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். காா்த்தியாயினி அம்பாள்- கல்யாண சுந்தரா் திருக்கல்யாணம் ஏப். 18-ஆம் தேதியும், தேரோட்டம் 21- ஆம் தேதி நடைபெறுகிறது.