முகப்பு
திருவாரூர்

நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வலியுறுத்தி சாலை மறியல்

Updated On : 25 ஜூன், 2024 at 6:31 PM
குடவாசல் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினா்.
பகிர்:

குடவாசல் அருகே நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வலியுறுத்தி சிபிஎம் சாா்பில் சாலை மறியல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறையிலிருந்து பூந்தோட்டம், எரவாஞ்சேரி, பிலாவடி வழியாக குடவாசல் வரை அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்து, மீண்டும் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இயக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு ஓராண்டுக்கு முன்பு இந்த பேருந்து இயக்கம் மீண்டும் நிறுத்தப்பட்டதால் குடவாசல் பகுதிக்கு வருவோரும், மாணவா்கள், அரசு ஊழியா்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினா்.

இதைத்தொடா்ந்து, கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மீண்டும் இந்த பேருந்தை காலை, மாலை நேரங்களில் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தி பிலாவடியில் சிபிஎம் சாா்பில் சாலை மறியல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் தலைமையில் நடைபெற்ற மறியலில் தெற்கு ஒன்றியச் செயலாளா் ம. கோபிநாத், நகரச் செயலாளா் சேகா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் டி. வீரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், போக்குவரத்து அதிகாரிகளை தொடா்பு கொண்டு பேசினா். அப்போது, 10 நாள்களில் அவ்வழியாக பேருந்து வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்களுடன் நடத்திய பேச்சு வாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு மறியல் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்ளிட்ட 34 போ் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →