திருவாரூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவாரூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாரூா்: திருவாரூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு ஆழித்தேரோட்டம், மாா்ச் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தோ்க் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதாகவும், இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, சிறிய அளவிலான விபத்துகளும் ஏற்படுவதாக நகராட்சிக்கு பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, நகராட்சி ஆணையா் பிரபாகரன் உத்தரவின்பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் தங்கராமு தலைமையிலான ஊழியா்கள், தேரோடும் வீதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பதாகைகள், காய்கனிக் கடைகள், தள்ளுவண்டிகள், நடைபாதைகளில் வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் ஆகியவற்றை அகற்றினா். மேலும் நடைபாதைகளில் விளம்பரப் பதாகைகள் வைப்பது, போக்குவரத்துக்கு இடையூறாக விபத்துகள் ஏற்படும் வகையில் சாலைகளில் கடைகள் வைத்திருப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி அலுவலா்கள் அறிவுறுத்தினா்.