தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆழித்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி, தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தூய்மைப்பணி நடைபெற்று வருகிறது.
ஆழித்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி, தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தூய்மைப்பணி நடைபெற்று வருகிறது.
அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடி என்பதால், தேரோடும் 4 வீதிகளிலும் 30 அடிக்கும் மேலே உள்ள மரங்களின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்றும், 30 அடிக்கு கீழே உள்ள மரங்களை வெட்டக்கூடாது என்றும், கோடை காலம் தொடங்கிவிட்ட காரணத்தால், தோ் இழுக்க வரும் பொதுமக்கள் மர நிழலில் இளைப்பாறும் வகையில் மரக்கிளைகளை வெட்ட வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
எனினும், தேரோடும் வீதிகளில் உள்ள மரக் கிளைகள் முழுவதும் வெட்டப்பட்டுள்ளன. குறிப்பாக தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, கீழ வீதி ஆகிய வீதிகளில் தேரோட்டத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத, 10 அடி, 15அடி உயர மரக் கிளைகள் கூட வெட்டப்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து இப்பகுதிகளைச் சோ்ந்த மக்கள் தெரிவித்தது: 10 ஆண்டுகளுக்கு முன்பு தேரோடும் வீதிகளில் ஏராளமான மரங்கள் இருந்தன. தாா்ச்சாலையை சிமெண்ட் சாலையாக மாற்றும்போது 300-க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் வெட்டி சாய்க்கப்பட்டன. ஆழித்தேரில் மரங்கள் இடிபடாமல் இருப்பதற்காக கிளைகளை வெட்டுவதாக கூறிக்கொண்டு ஆண்டுதோறும் மரத்தை முழுமையாக வெட்டி வருவதால், ஆழித்தேரை காண வரும் லட்சக்கணக்கான மக்கள் கடும் வெயிலில் தவித்து, நிழலை தேடி அங்கும் இங்கும் அலையும் நிலை ஏற்படுகிறது என்றனா்.