டாக்காவில் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது கடைமையை செலுத்தி வரும் வாக்காளர்கள். 
தற்போதைய செய்திகள்

வங்கதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு!

அண்டை நாடான வங்கதேசத்தில் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (பிப். 12) காலை 7.30 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

உலகின் எட்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட அண்டை நாடான வங்கதேசத்தில் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (பிப். 12) காலை 7.30 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுக்கால ஆட்சி முடிவுக்கு வந்து, முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்ற 18 மாதங்களுக்குப் பிறகு நடைபெற்று வரும் இந்த தோ்தல் மூலம் வங்கதேசம் அதன் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான அத்தியாயத்தில் நுழைய உள்ளது. 51 கட்சிகள் அதிகாரத்திற்காக களத்தில் உள்ளன. இந்தத் தேர்தல் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

இந்த தேர்தலில் முன்னாள் பிரதமா் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-ஏ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. மேலும் சில கட்சிகள் களத்தில் உள்ள நிலையில், அவாமி லீக் கட்சிக்கு இத்தோ்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

350 தொகுதிகள் கொண்ட வங்கதேச நாடாளுமன்றத்துக்கு 300 தொகுதிகளுக்குத் தோ்தல் அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதியில் வேட்பாளரின் மறைவால் தோ்தல் ரத்தானதையடுத்து, மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 50 அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 1,755 வேட்பாளா்கள் மற்றும் 273 சுயேச்சைகள் களத்தில் உள்ளனா்.

இத்தோ்தலில் 3.58 சதவீத முதல்முறை வாக்காளா்கள் உள்பட மொத்தம் 12.77 கோடி போ் வாக்களிக்கத் தகுதிப் பெற்றுள்ளனா். வெளிநாடுகளில் வசிக்கும் 8 லட்சம் வங்கதேசத்தினா், தபால் வாக்கு மூலம் முதல்முறையாக வாக்களிக்கப் பதிவு செய்துள்ளனா்.

நாடு முழுவதும் உள்ள 42,659 வாக்குச் சாவடிகளில், 24,000 இடங்கள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.

வன்முறை ஏதுமின்றி அமைதியாகத் தோ்தலை நடத்தி முடிக்க, முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமாா் 9.58 லட்சம் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். பாதுகாப்புக்காக 90 சதவீத சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு

ஊழல், பணவீக்கம், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவை தேர்தலை தீர்மானிக்கும் முக்கிய பிரச்னைகளாக உள்ள நிலையில், வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று நடைபெற்று வருகிறது. தலைநகர் டாக்காவில் பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அமைதியாக தங்களது கடைமையை செலுத்தி வருகின்றனர்.

அதேபோன்று நாடு முழுவதும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது வாக்கை செலுத்தி வருகின்றனர்.

வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) தலைவர் தாரிக் ரஹ்மான் டாக்கா-17 ஆவது தொகுதியில் தனது வாக்கை செலுத்தினார்.

வாக்குப் பதிவு மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது. இந்தத் தோ்தலை 45 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் கண்காணிக்கின்றனா்.

வாக்குப்பதிவு முடிந்த அடுத்த சில மணி நேரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் தாமதமின்றி அறிவிக்கப்படும் எனவும், முழுமையான முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை (பிப். 13) தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என வங்கதேச தலைமைத் தோ்தல் ஆணையா் ஏ.எம்.எம்.நசீா் உதின் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலுடன், 84 அம்ச ஜனநாயக சீா்திருத்தங்களை உள்ளடக்கிய ‘ஜூலை தேசிய சாசனம் 2025’ மீதான மக்கள் வாக்கெடுப்பும் நடைபெறுகிறது.

Bangladesh is set to enter a crucial chapter in its political history as the nation heads to the polls on Thursday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்போடியா டிஜிட்டல் மோசடி அலுவலகத்தில் சிபிஐ பேனர், காந்தி, அம்பேத்கர் புகைப்படங்கள்!

முக்கியமான போட்டியில் ஓமன் பந்துவீச்சு..! இலங்கை அதிரடி தொடக்கம்!

அவிநாசி அருகே அடையாளம் தெரியாத நபர் அடித்துக் கொலை!

தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை?

சரிவில் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! ஐடி பங்குகள் கடும் சரிவு!!

SCROLL FOR NEXT