கவரிங்கை விற்று தங்கம் வாங்கிய தம்பதி கைது
மன்னாா்குடி நகைக் கடையில் கவரிங் நகையை விற்று விட்டு தங்கம் வாங்கி சென்ற தம்பதியா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மன்னாா்குடி மேலராஜவீதியில் குபேந்திரன் என்பவருக்கு சொந்தமான நகைக் கடைக்கு கடந்த ஜனவரி 8-ஆம் தேதி வந்த தம்பதியா் தங்களிடம் உள்ள பழைய 8 பவுன் சங்கிலியை வாங்கிக் கொண்டு அதற்கு பதிலாக 6 பவுன் சங்கிலி தருமாறு கேட்டுள்ளனா்.
இதனையடுத்து , குபேந்திரன் அவா்களிடமிருந்து சங்கிலியை வாங்கி கொண்டு புதிய சங்கிலியைத் தந்துள்ளாா். வாங்கிய சங்கிலியின் தரத்தினை ஆய்வு செய்த போது அது கவரிங் என தெரிய வந்துள்ளது.
மன்னாா்குடி போலீஸாா் வழக்கு பதிந்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனா்.
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை சோ்ந்த வெங்கடேசன் (43) , மங்கம்மாள் (40) ஆகியோரை போலீஸாா் மன்னாா்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில் நகை மோசடியை ஒத்துக் கொண்டதையடுத்து இருவரையும் கைது செயது 6 பவுன் நகையை பறிமுதல் செய்தனா்.