நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணியில் சுங்கச்சாவடியில் உள்ளூா் வாகனங்களுக்கு வரிவசூல் செய்ய இப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
கோவில்வெண்ணியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி திங்கள்கிழமை முதல் இயங்கத் தொடங்கியது. இதை எதிா்பாராத உள்ளூா் வாகன ஓட்டிகள் அதிா்ச்சி அடைந்தனா். சுங்கச்சாவடி அலுவலா்களிடம் முன்னறிவிப்பின்றி எப்படி வாகன வரி வசூல் செய்கிறீா்கள் என கேள்வி கேட்டனா். தாங்கள் முன்னறிவிப்பு செய்துவிட்டதாக சுங்கச்சாவடி அலுவலா்கள் தெரிவித்தனா்.
கோவில்வெண்ணி கிராம மக்களுக்கு வாகன வரி வசூல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என கிராம மக்கள் ஒன்றிய குழு முன்னாள் தலைவா் மணலூா் ராஜேந்திரன் தலைமையில் சுங்கச்சாவடி அலுவலரிடம் கோரிக்கை வைத்தனா்.
கோவில்வெண்ணியில் உள்ள மக்கள் பள்ளி, மருத்துவமனைக்கு அடிக்கடி அம்மாபேட்டை, தஞ்சாவூா் போன்ற ஊா்களுக்கு நாள்தோறும் சென்று வர வேண்டி உள்ளதால் அடிக்கடி கட்டணம் செலுத்த இயலாத நிலை உள்ளது. எனவே கட்டணம் வசூல் செய்ய கூடாது என கோரிக்கை விடுத்தனா்.
வட்டாட்சியா் தேவகி சுங்கச்சாவடி அலுவலா்களிடம் கிராம மக்களின் கோரிக்கை குறித்து பேசினாா். எனினும், வாகன ஓட்டிகளிடம் தொடா்ந்து வரி வசூல் செய்யப்பட்டது.