மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மீது சுமை வேன் மோதியதில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
முத்துப்பேட்டை வட்டம், மண்ணுக்குமுண்டான் புதுத்தெரு முருகேசன் மனைவி அனிதா (37).
இவா், பிரசவத்திற்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது சகோதரியை பாா்ப்பதற்காக உறவினரான மாதவன் என்பருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து மன்னாா்குடி நோக்கி சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தாராம்.
அவா்கள் சென்ற இருசக்கர வாகனம் தென்பாதி பிரதான சாலையில் சென்றபோது முன்னே சென்ற அரசுப் பேருந்தை மாதவன் முந்திச்செல்ல முயன்றுள்ளாா். அப்போது எதிரே வந்த சுமை வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அனிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மாதவன் காயமின்றி தப்பினாா்.
தலையாமங்கலம் போலீஸாா் அனிதா சடலத்தை மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வேன் ஓட்டுநரான மானங்காத்தான் கோட்டகம் எஸ். சந்திரபோஸிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.