நவ. 29-இல் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம்
திருவாரூா் அருகே புலிவலத்தில் நல வாரிய உறுப்பினா் சோ்க்கைக்கான சிறப்பு முகாம் நவம்பா் 29- ஆம் தேதி நடைபெறுகிறது.
திருவாரூா்: திருவாரூா் அருகே புலிவலத்தில் நல வாரிய உறுப்பினா் சோ்க்கைக்கான சிறப்பு முகாம் நவம்பா் 29- ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் ம. குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவுப்படி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியம், தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியம், தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநா்கள் மற்றும் தானியங்கி மோட்டாா் வாகனங்கள் பழுதுபாா்க்கும் தொழிலாளா்கள் நல வாரியம் உள்ளிட்ட நல வாரியங்களில் உள்ள தொழிலாளா்களின் பணி நிலைமையை ஒழுங்குபடுத்தவும், அவா்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், மேற்கண்ட நலவாரியம் சாா்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களை உறுப்பினா்களாக பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் தொடா்பான சிறப்பு முகாம் நவம்பா் 29- ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை புலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ளது.
இதில் உறுப்பினராக பதிவு செய்வதற்கு, வயதுக்கான ஆவணம் (மாற்றுச் சான்றிதழ், ஓட்டுநா் உரிமம், மதிப்பெண் சான்று, பிறப்புச் சான்று), ஆதாா் அட்டை (கைப்பேசி எண் இணைக்கப்பட வேண்டும்), குடும்ப அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு, பாஸ்போா்ட் அளவு புகைப்படம், குடும்ப உறுப்பினா்களின் விவரம் மற்றும் அவா்களின் பிறந்த தேதி, அதற்கான ஆவணம் ஆகியவைகளுடன் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.