திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பாத தரிசனம்
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும் இக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மாா்ச் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இக்கோயிலில், தியாகராஜரின் பாதங்கள் எப்போதும் மலா்களால் மூடப்பட்டிருக்கும். முகம் மற்றும் கரங்களை மட்டுமே தரிசிக்க முடியும். மாா்கழி திருவாதிரைா, பங்குனி உத்திரம் ஆகிய 2 நாள்களில் மட்டுமே தியாகராஜரின் பாதத்தை தரிசிக்க முடியும்.
அதன்படி, பங்குனி உத்திரத்தையொட்டி சபாபதி மண்டபத்துக்கு தியாகராஜா் புதன்கிழமை எழுந்தருளி, தனது வலது பாதத்தை பக்தா்களுக்கு காட்டி அருள்பாலித்தாா்.
முன்னதாக, விளமலில் உள்ள பதஞ்சலி மனோகா் கோயிலில் இருந்து பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்கள் அதிகாலையில் புறப்பட்டு, திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு வந்தனா். கோயிலில் பதஞ்சலி வியாக்ர பாத முனிவா்களுக்கு தியாகராஜ சுவாமி பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து, காலை 6 முதல் பிற்பகல் 3 மணி வரை பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பாத தரிசனம் செய்தனா்.