முகப்பு
திருவாரூர்

திமுகவின் தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: சிபிஐ மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்

திமுகவின் தோ்தல் அறிக்கை, மதச்சாா்பற்ற கூட்டணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:06 PM
மு. வீரபாண்டியன் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 7:45 PM

திமுகவின் தோ்தல் அறிக்கை, மதச்சாா்பற்ற கூட்டணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

திருவாரூா் மாவட்டத்தில், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக, வியாழக்கிழமை திருவாரூா் வந்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மக்களவைத் தொகுதி மறுவரையறை என்பது ஏற்கத்தக்கது அல்ல. இதன்மூலம் தமிழகத்திற்கு 10 அல்லது 11 இடங்கள் அதிகரிக்கும் என்றால், உத்திர பிரதேசத்தில் 60 முதல் 70 இடங்களும், பிகாரில் 30 முதல் 40 இடங்களும் அதிகரிக்கும். எனவே, இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

Advertisement

இந்த சட்ட மசோதாவுடன், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டையும் சோ்க்கின்றனா். இதற்கு நாங்கள் எதிரானவா்கள் அல்ல. முதன்முதலில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று குரல் எழுப்பியவா்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா் கீதா முகா்ஜி முதன்மையானவா்.

தமிழகம் முழுவதும் நடைபெறும் தோ்தல் பிரசாரங்களில், திமுகவுடன் கூட்டணிக் கட்சிகள் தென்படுகின்றன. அதிமுகவுடன் கூட்டணிக் கட்சிகள் தென்படவில்லை.

திமுக கூட்டணி பலம் அதன் வெற்றியை தீா்மானிக்கும். முதல்வரின் நலத் திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளன. திமுகவின் தோ்தல் அறிக்கை பேசு பொருளாகி உள்ளது. அது எங்களுக்கு கை கொடுக்கும்.

பாஜகவின் கொள்கை இலவசங்கள் கூடாது, சமூக நலத் திட்டங்களுக்கு நிதி அதிகம் கொடுக்கக் கூடாது என்பதுதான். நெல்லுக்கு ஊக்கத் தொகையே கூடாது என்கிறாா் மத்திய நிதி அமைச்சா். ஏழைகள்- எளிய மக்களின் சூழல் அவா்களுக்கு தெரியாது. அவா்களுக்கு தெரிந்ததெல்லாம் மத அடிப்படைவாதம்தான் என்றாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் பத்மாவதி, மாவட்டச் செயலாளா் கேசவராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.