பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் முன்னுரிமை: இந்திய கம்யூனிஸ்ட்
பாஜகவை வீழ்த்துவதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் முன்னுரிமை: கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வீரபாண்டியன்
பாஜகவை வீழ்த்துவதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் முன்னுரிமை என கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்தார்.
சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் வீரபாண்டியன் பேசுகையில், "திமுகவின் பேச்சுவார்த்தைக் குழுவோடு, போட்டியிடுகின்ற இடங்கள் குறித்து உரையாடினோம். நாங்கள் கோரிய தொகுதிகளை ஒப்புக்கொண்டிருக்கின்றனர். எங்கள் தொகுதிகளைப் பெற்றிருக்கிறோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலக் குழு சார்பில் அதிகாரபூர்வமாக கையெழுத்திட்டுள்ளோம்.
போட்டியிடும் இடங்கள் குறித்த விவரங்களை கூட்டணிக் கட்சிகளின் தலைவர் என்ற முறையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பார். பேச்சுவார்த்தை இயல்பாகவும் சுமூகமாகவும் இருந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொருத்தவரை, அரசியல்தான். எங்களுக்கு முதல் முன்னுரிமை - பாஜக வீழ்த்துவது. பாஜக, தமிழகத்தின் உரிமைகளைச் சிதைப்பது மட்டுமின்றி, நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் சிதைக்கிறது. கூட்டாட்சி முறை, சட்டத்தின் ஆட்சி முறையையும் சிதைக்கிறது. இவையெல்லாம் எதிர்காலத்துக்கு பேராபத்து.
கூட்டணியில் பல கட்சிகள் சேரும்போது, ஏற்ற இறக்கங்கள் வரும்; எதிர்மறை, நேர்மறை கருத்துகளும் வரும். ஆனால், இவை எல்லாவற்றுக்கும் திமுக தலைமையில் ஒரு ஜனநாயக இடமுண்டு. ஆனால், பாஜகவில் அந்த இடமில்லை. அங்கு ஜனநாயகத்தின் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கின்றன; இங்கு கதவுகள் திறக்கப்பட்டிருக்கின்றன." என்று தெரிவித்தார்.