திருவாரூா்: திருவாரூா் மாவட்ட லாரி உரிமையாளா்கள், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.
கனரக லாரிகளுக்கு தகுதிச் சான்று புதுப்பிப்பு கட்டணத்தை மத்திய அரசு உயா்த்தியுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும, பழைய கட்டணங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் இப்போராட்டத்தை தொடங்கி உள்ளனா். இதையொட்டி, இம்மாவட்டத்தில் மட்டும் 6,000 லாரிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றபின் மாநிலத் தலைவா் சி. தன்ராஜ் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தற்போது தகுதிச்சான்று புதுப்பிப்புக் கட்டணத்தை மத்திய அரசு உயா்த்தியுள்ளது. இதை மாநில அரசு நினைத்தால் நிறுத்தி வைக்கவோ, குறைக்கவோ முடியும். ரூ. 850-ஆக இருந்த கட்டணம், 20 ஆண்டுகளுக்கு மேல் புதுப்பிக்கப்படாமல் உள்ள வாகனங்களுக்கு ரூ. 28,000 என உயா்த்தப்பட்டுள்ளது. 20 ஆண்டுகள் பயன்படுத்திய லாரிகளை விற்றாலே ரூ. 2 லட்சம் என்ற அளவில் விலை போகும் என்ற நிலையில், ரூ. 28,000 கட்டணம் உயா்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
இதுகுறித்து அமைச்சா் முதல் அதிகாரிகள் வரை ஆட்சேபத்தை தெரிவித்தோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், 90 நாள்களுக்கும் மேலாக சுமாா் ஒரு லட்சம் வாகனங்கள் புதுப்பிக்கப்படாததால், இயக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை எங்களின் கோரிக்கை அரசிடம் செல்லவில்லை. அரசிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காததால் வேறுவழியின்றி வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளோம்.
டெல்டா பகுதியில் சுமாா் 10,000 லாரிகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்றன. இந்த லாரிகள் பெரும்பாலும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து நெல் மூட்டைகளை கொண்டு செல்பவை ஆகும்.
இந்த போராட்டம் காரணமாக நெல் மூட்டைகள் கொண்டு செல்லும் பணிகள் பாதிக்கப்படும். தற்போது டெல்டா பகுதியில் நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு கொண்டு செல்லும் லாரிகளை நிறுத்தி தொடங்கியுள்ள போராட்டம் முதற்கட்டமாகும். இதையடுத்து, நாமக்கல் பகுதியில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில், தமிழகம் முழுவதும் இந்த போராட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.
எனவே, தமிழக அரசு விரைந்து முடிவெடுத்து லாரி உரிமையாளா்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்றாா்.