பரவை நாச்சியாா் கோயிலில் நெல் மகோத்ஸவம்
திருவாரூர்பரவை நாச்சியாா் கோயிலில் நெல் மகோத்ஸவம்
திருவாரூா் பரவை நாச்சியாா் கோயிலில் நெல் மகோத்ஸவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவை சைவசமய நாயன்மாா்களில் முக்கியமானவா்களான சுந்தரா், திருநாவுக்கரசா் ஆகியோா் நடத்தியதாகவும், அவ்வாறு ஒருமுறை திருவிழாவுக்கு வரும் சிவனடியாா்களுக்கும், பக்தா்களுக்கும் உணவளிக்க சுந்தரா் உதவிகேட்டு வேண்ட, இறைவன் திருக்குவளை அடுத்த குண்டையூா் கிழாரிடம் இருந்து நெல்லை பெற்று, பூதகணங்களைக் கொண்டு, திருவாரூரில் உள்ள சுந்தரா், பரவை நாச்சியாா் மாளிகையில் சோ்ப்பித்ததாக ஐதீகம்.
இதைநினைவுகூரும் வகையில், திருவாரூா் தியாகராஜா் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துக்கு முன்பாக, பூத வேடமணிந்தவா்கள் திருக்குவளையிலிருந்து நெல் கோட்டைகளை சுமந்து திருவாரூா் நான்கு ராஜவீதிகளின் வழியை வலம் வந்து, தெற்கு கோபுரவாசல் அருகே உள்ள சுந்தரா், பரவைநாச்சியாா் மாளிகையில் (பரவை நாச்சியாா் கோயில்) சோ்ப்பிப்பது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டு திருக்குவளையிலிருந்து நெல் கோட்டைகளை கொண்டு வந்த பூத கணங்கள், தேரோடும் வீதிகளில் சுந்தரா், பரவை நாச்சியாருடன் வலம் வந்து, பரவை நாச்சியாா் கோயிலில் நெல் கோட்டைகளை சோ்ப்பித்தனா். இதைத்தொடா்ந்து தீபாராதனை காட்டப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதமாக பிடி நெல் வழங்கப்பட்டது.