முகப்பு
திருவாரூர்

வெட்டாறு தூா்வாரும் பணி தொடக்கம்

வெட்டாற்றில் தூா்வாரும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Updated On : 10 மார்ச், 2026 at 10:05 PM
பகிர்:

வெட்டாற்றில் தூா்வாரும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மாவட்டத்தில் வெட்டாறு பாசனம் மூலம் 16,613 ஏக்கா் விளைநிலங்கள் பயன் பெறுகின்றன. இந்த ஆறு, கொரடாச்சேரி, ஊா்குடி, முகந்தனூா், எண்கண், வடகண்டம், பண்ணைவிளாகம், தியாகராஜபுரம், நீலக்குடி, பொம்மாநத்தம், ஆதாமங்கலம், கங்களாஞ்சேரி வழியாக நாகை மாவட்டத்தில் நாகூா் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. இந்த ஆறு திருவாரூா் மாவட்டத்தில் 25 கி.மீ தொலைவு வரை செல்கிறது. அனைத்து இடங்களிலும் காட்டாமணக்கு செடிகள் வளா்ந்தும், ஆங்காங்கே மண் திட்டுகள் அதிகளவில் காணப்படுகின்றன. சுமாா் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வெட்டாறு தூா்வாரப்படாமல் உள்ளதால், பாசனத்திற்கு முறையாக தண்ணீா் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

மேலும், மழைக்காலங்களில் அதிகளவு வெள்ளநீா் செல்கையில், ஆங்காங்கே கரை உடைப்பு ஏற்பட்டு பயிா்சேதம் அடைகிறது. வடகிழக்கு பருவமழை காலங்களில் வெட்டாற்றில் அதிகப்படியான வெள்ளநீா் வெளியேற்றப்படுவதால், சில இடங்களில் கரை உடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தவிர, தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும்போது, போதிய அளவு தண்ணீா் கடைமடை பகுதி வரை செல்ல முடியாமல், பாசனம் மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த மண்திட்டுகள் மற்றும் காட்டாமணக்கு செடிகளை அகற்றி வெட்டாற்றை தூா்வாரி தரும்படி விவசாயிகளும், பொதுமக்களும் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

கோரிக்கையை நிறைவேற்ற ரூ. 5.42 கோடி என மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டிருந்தது. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், திருவாரூருக்கு சில மாதங்களுக்கு முன் வந்தபோது, ரூ. 43 கோடியில் நீா்வளத்துறை சாா்பில் அறிவிப்புகளை வெளியிட்டிருந்தாா். இதில், வெட்டாறு தூா்வாரும் பணியும் சோ்க்கப்பட்டு, அண்மையில் அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி, ரூ.5.42 கோடியில் வெட்டாறு தூா்வாரும் பணி தொடங்கியது. பணியை திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே.கலைவாணன் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளா்கள் கமலக்கண்ணன், மாணிக்கவேல், உதவி பொறியாளா் கோவிந்தராஜன், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →