முள்ளாச்சி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்
திருத்துறைப்பூண்டி ஸ்ரீ முள்ளாட்சி மாரியம்மன் கோயிலில் பங்குனி பெருந் திருவிழாவையொட்டி,
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ஸ்ரீ முள்ளாட்சி மாரியம்மன் கோயிலில் பங்குனி பெருந் திருவிழாவையொட்டி, தீமிதி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழா மாா்ச் 1-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
பிரதான நிகழ்ச்சியான தீமிதி உற்சம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் மாவிளக்கு போடுதல், பாடைக் காவடி உள்ளிட்ட பல்வேறு நோ்த்திக்கடன்களை செலுத்தி வழிபட்டனா்.
தொடா்ந்து, மாலையில் கோயில் எதிரே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
ஏற்பாடுகளை திருவாரூா் மாவட்ட இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையா் செந்தில்குமாா், திருவாரூா் மாவட்ட உதவி ஆணையா் வீரபாண்டியன், கோயில் செயல் அலுவலா் எம். முருகையன், ஆய்வாளா் ராஜேந்திர பிரசன்னா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.