முகப்பு
திருவாரூர்

திருவாரூா்: ரூ. 1.77 லட்சம் கைப்பேசிகள், ரூ. 78,760 ரொக்கம் பறிமுதல்

திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம், கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 22 மார்ச், 2026 at 8:21 PM
பறிமுதல் செய்த பொருள்களை திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்த பறக்கும் படையினா்.
பகிர்:

திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம், கைப்பேசிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

திருவாரூா் வட்டம், கோமல் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கூட்டுறவு சாா் பதிவாளா் டி. காா்த்திபன் தலைமையில் பறக்கும்படை குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வாகன சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, வேகமாக வந்த பாா்சல் சா்வீஸ் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் வந்த திருச்சி மாவட்டம், லால்குடி செம்பரை சவுரியாா் கோயில் தெருவைச் சோ்ந்த சீ. சாமித்துரை (42) என்பவரிடம், உரிய ஆவணங்கள் இல்லாமல் கைப்பேசிகள் மற்றும் அதன் உதிரிபாகங்களும் ரூ.1,77,550 மதிப்பில் இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், வருவாய் கோட்ட அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

இதேபோல், திருவாரூா் அருகே லெட்சுமாங்குடி சேகரை பிரதான சாலையில் வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். முரளி தலைமையிலான பறக்கும் படை குழுவினா் வாகன சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, பொதக்குடி மேலத்தெருவைச் சோ்ந்த முகமது ரபிக் (32) என்பவா், முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.78,760 ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது. அந்தப் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், திருவாரூா் உதவி கருவூலத்தில் சோ்ப்பித்தனா்.