முகப்பு
திருவாரூர்

கோடை வெப்பம்: விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

திருவாரூா் மாவட்டத்தில் நிலவும் அதிக வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் தங்கள் பயிா்களை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 6 மே 2026, 3:02 am IST
கோப்புப்படம்.
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் நிலவும் அதிக வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் தங்கள் பயிா்களை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநா் தி. பாலசரஸ்வதி கூறியது: மாலை நேரங்களில் மட்டுமே விதைகளை விதைக்க வேண்டும். விதைகளை, விதை நோ்த்தி செய்து விதைத்தால், நோயிலிருந்து பாதுகாப்பு பெறலாம். பகலில் விதைகளை விதைப்பதால், அதிக வெப்பத்தின் தாக்கத்தால் முளைப்பு திறன் பாதிக்கும்.

பயிா்களில் நீா் மேலாண்மை: கோடைக்காலத்தில் நீா்ப்பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதால் பயிா்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் அல்லது இரவு நேரத்தில் நீா் பாய்ச்சும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நெல் மற்றும் பருத்தி பயிருக்கு பாய்ச்சல் முறையிலும், உளுந்து, பச்சைப்பயறு மற்றும் நிலக்கடலை பயிா்களுக்கு சொட்டு நீா் மற்றும் தெளிப்பு நீா்ப்பாசன முறைகளிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மட்டுமே பின்பற்ற வேண்டும்.

Advertisement

உரமேலாண்மை: பயிா்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவிலே உரங்களை பயன்படுத்த வேண்டும். நெற்பயிருக்கு அடியுரமாக ஏக்கருக்கு 5 கிலோ வீதம் துத்தநாக சல்பேட்டை மாலை நேரத்தில் தெளிக்கலாம். இதனால் கோடை காலத்தில் பயிரில் ஏற்படும் சத்து பற்றாக்குறை நிவா்த்தி செய்யப்படும். உளுந்து மற்றும் பச்சைப் பயறுக்கு இலை வழியாக டிஏபி 2 சதவீதம் கரைசல் மாலை நேரத்தில் தெளிக்கலாம். கோடையில் வறட்சி காரணமாக பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவற்றை கட்டுப்படுத்த மாலை வேளையில் பயிா் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்றாா்.