கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!
கோடை வெப்பம் காரணமாக, வாக்குப்பதிவு தொடங்கிய 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களித்துள்ளனர்.
சென்னை: ஏப்ரல் 23ஆம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கும் மேல் வாக்களித்திருக்கிறார்கள் என்கின்றன தரவுகள்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மிக அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 37.56 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கினாலும், பல இடங்களில் 6 மணியிலிருந்தே வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையில் நின்றிருப்பதை காண முடிந்தது.
Advertisement
வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்த தங்களது வாக்குகளை செலுத்தினர். பொதுவாக குறைந்த கூட்டம் காணப்படும் வாக்குச்சாவடிகளில்கூட, காலையில் இருந்தே கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
சென்னையில் 35 சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதேவேளையில் சென்னைக்கு உள்பட்ட பகுதிகளான விருகம்பாக்கத்தில் அதிகபட்சமாக 39.39 சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கிறது. திரு.வி.க. நகரில் 31.37 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்குப்பதிவு நிலவரம் 11 மணி வரை வந்துள்ளது. இதன்படி, மொத்தமுள்ள 5.73 கோடி வாக்காளர்களில் இதுவரை 2 கோடிப் பேருக்கும் மேல் வாக்களித்திருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
மதியம் 12 மணிக்குள் பெரும்பாலானோர் வாக்குகளை செலுத்திவிடுவார்கள் என்றும், கோடை வெய்யில் காரணமாக 2 மணி வரை வாக்குப்பதிவு சற்று மந்தமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், 2 மணிக்கு வரிசை குறைவாக இருக்கும் என்பதால், காலையில் வாக்களிக்க முடியாதவர்கள் அந்த நேரத்தை தேரிவு செய்து வாக்களிக்க வரலாம் என்றும், பொதுவாக இளைஞர்கள் அந்த நேரத்தை அதிகம் பயன்படுத்திக் கொண்டு வாக்களிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் நிலையில், காலையில் இருந்தே ஏராளமானோர் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகிறார்கள். அதுபோல, அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் மிக ஆர்வத்தோடு வந்து வாக்களித்துள்ளனர்.
இதற்கிடையே, சொந்த ஊர்களுக்கு வாக்களிக்கக் கிளம்பிய மக்கள், போதிய பேருந்து வசதி இல்லாததால் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். மேலும், சென்னையின் புறநகர்ப் பகுதிகளான தாம்பரத்தை அடுத்து பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாக்களிக்க முடியாமல் மக்கள் பலரும் தவித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.