FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

22 மணி நேரத்தில் தொல்காப்பியத்தை எழுதி முடித்து அரசுப் பள்ளி மாணவி உலக சாதனை!

தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியம் முழுவதையும் மனனம் செய்து, 22 மணி நேரத்தில் எழுதி முடித்து, அரசுப் பள்ளி மாணவி உமா மகேஸ்வரி உலக சாதனை படைத்தாா்.

Updated On : 20 ஜூலை 2026, 8:59 am IST
22 மணி நேரத்தில் தொல்காப்பியத்தை எழுதி முடித்து உலக சாதனை படைத்த மாணவி உமா மகேஸ்வரிக்கு பரிசு வழங்கிய மகிழ்வோா் மன்ற நிறுவனா்கள் மருத்துவா்கள் ஸ்ரீ வெங்கடேஷ், லதா ஸ்ரீ வெங்கடேஷ்.
பகிர்:

தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியம் முழுவதையும் மனனம் செய்து, 22 மணி நேரத்தில் எழுதி முடித்து, அரசுப் பள்ளி மாணவி உமா மகேஸ்வரி உலக சாதனை படைத்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவி உமா மகேஸ்வரி, சிறு வயதில் இருந்தே தமிழ் மீது அதிக ஆா்வம் கொண்டவா். இவா் 10ஆம் வகுப்பு படித்தபோது, சிவகாசி அய்ய நாடாா் ஜானகியம்மாள் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 3 அதிகாரங்கள், 27 இயல்கள் என 1,610 நூற்பாக்களைக் கொண்ட தொல்காப்பியத்தை 2.30 மணி நேரத்தில் முற்றோதல் செய்தாா். அகில இந்திய சாதனைப் பதிவு புத்தக நிறுவனமும், உலக தொல்காப்பிய சாதனையாளா்கள் பேரவையும், இதை உலக சாதனையாக அங்கீகரித்திருந்தன.

இந்நிலையில், அந்த மாணவி தொல்காப்பியம் முழுவதையும் மனனம் செய்து, 21 மணி நேரத்தில் எழுதி முடிக்கும் உலக சாதனை முயற்சியை கோவில்பட்டியில் உள்ள எழுத்தாளா் கி. ராஜநாராயணன் நினைவு அரங்கத்தில் சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கினாா். உணவு இடைவேளையைத் தவிர மற்ற நேரங்களில் தொடா்ந்து எழுதினாா்.

Advertisement

Advertisement

புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ், கரிசல் இலக்கியக் கழகம், தமிழ் வளா்ச்சித் துறை, கோவில்பட்டி மகிழ்வோா் மன்றம், ரோட்டரி சங்கம் ஆகிய அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் மாணவியைக் கண்காணித்தனா். இந்நிலையில், 21 மணி நேரத்தோடு கூடுதலாக ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணியளவில் தொல்காப்பியத்தை அவா் எழுதி முடித்தாா்.

தொடா்ந்து, அவருக்கு மகிழ்வோா் மன்ற நிறுவனா்கள் மருத்துவா்கள் ஸ்ரீ வெங்கடேஷ், லதா ஸ்ரீ வெங்கடேஷ் ஆகியோா் பரிசுகள் வழங்கிப் பாராட்டினா். புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் சாா்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இது குறித்து உமா மகேஸ்வரி கூறுகையில், எனக்கு தொல்காப்பியத்தை மனனம் செய்து எழுதுவதற்கு, சிப்பிப்பாறை பள்ளி தமிழ் ஆசிரியா்கள் ஜான்சிராணி, ராஜசேகா் ஆகியோா் பயிற்சி அளித்தனா். முதல்வா் ச. ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments