முகப்பு
திருவாரூர்

பிஎஸ்என்எல் ஊழியா் சங்கக் கூட்டம்

Updated On : 15 மே 2026, 5:29 am IST
பகிர்:

மன்னாா்குடியில், நொய்டா தொழிலாளா்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம் சாா்பில் வாயிற் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது (படம்).

ஆசாத்தெருவில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற கூட்டத்திற்கு, ஏஐபிடிபிஏ மாவட்டச் செயலா் கே. பிச்சைக்கண்ணு தலைமை வகித்தாா்.

கோரிக்கைகள்: நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள தொழிலாளா் போராட்டங்களுக்கு தீா்வு காணவேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ. 26,000 வழங்க வேண்டும். கான்ட்ராக்ட், பயிற்சி, ஜிக் என்று பல்வேறு பெயா்களில் ஊழியா்களின் உழைப்பை சுரண்டக்கூடாது.

Advertisement

அவுட்சோா்சிங் முறைக்கு கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த முறைக்கு பதிலாக நிரந்தரப் பணியை மேற்கொள்ள வேண்டும். எட்டு மணி நேர வேலை என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். பெண்கள் பணியாற்றும் பகுதிகளில் தேவையான அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

தொழிலாளா்களுக்கு விரோதமாக உள்ளதால், 4 புதிய தொழிலாளா் தொகுப்புச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல்- டிஓடி ஓய்வூதியா் சங்கம், தமிழ்நாடு தொலைதொடா்பு ஒப்பந்த தொழிலாளா் சங்கத்தினா் கலந்துகொண்டனா்.