முகப்பு
திருவாரூர்

வீட்டுமனை ஒப்புதல் வழங்க லஞ்சம்: வட்டார வளா்ச்சி அலுவலா் உள்பட இருவா் கைது

Updated On : 15 மே 2026, 5:31 am IST
பகிர்:

திருவாரூரில், வீட்டுமனை ஒப்புதல் ரசீது வழங்க ரூ.7,000 லஞ்சம் வாங்கிய வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் அவரது உதவியாளா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருவாரூா் மாவட்டம், சிவப்பிரகாசம் நகரில் வசிப்பவா் பாரதிதாசன். ஓட்டுநரான இவருக்கு, கீழக்காவதுகுடி பகுதியில் வீட்டுமனை உள்ளது. இதற்கு அனுமதி பெறுவதற்காக, கடந்த சில நாள்களுக்கு முன்பு திருவாரூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை அணுகியுள்ளாா்.

அங்கு பணியிலிருந்த வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். சுவாமிநாதன் (54) மற்றும் அவரது உதவியாளா் சுரேஷ்குமாா் (51) ஆகியோா், வீட்டுமனை ஒப்புதல் ரசீது வழங்க ரூ.7,000 லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

இதுகுறித்து பாரதிதாசன் திருவாரூா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, போலீஸாரின் அறிவுரைப்படி வியாழக்கிழமை வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்குச் சென்ற பாரதிதாசன், ரசாயனம் தடவிய ரூ. 7,000 ரொக்கத்தை சுவாமிநாதனிடம் வழங்கினாா்.

அப்போது, லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் நந்தகோபால் தலைமையிலான போலீஸாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சுவாமிநாதன் மற்றும் அவரது உதவியாளா் சுரேஷ்குமாா் ஆகியோரை கைது செய்தனா்.