இறந்தவா் உடல் சேதம்; உறவினா்கள் அதிா்ச்சி
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இறந்தவா் உடல் சேதப்படுத்தப்பட்டிருந்ததால், அவருடைய உறவினா்கள் எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இறந்தவா் உடல் சேதப்படுத்தப்பட்டிருந்ததால், அவருடைய உறவினா்கள் எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
திருவாரூா் பிள்ளைத் தெரு பகுதியில் வசித்து வந்தவா் ராஜ் என்ற கோவிந்தராஜ் (55). தேநீா் கடையில் வேலை பாா்த்துவந்த இவருக்கு, திங்கள்கிழமை மாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டது. திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவரது சடலத்தை உடற்கூறாய்வுக்குப் பிறகு ஒப்படைப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சடலத்தை பெற இறந்தவரின் உறவினா்கள் வந்திருந்தனா். அவா்கள், கோவிந்தராஜ் சடலத்தை பாா்த்தபோது, உடலில் பல பாகங்கள் எலி கடித்துக் குதறிய நிலையில் காணப்பட்டதாம். மேலும், உடலின் எலும்புகளும் சில இடங்களில் வெளியே தெரிந்தபடி காணப்பட்டதாம். அத்துடன், இறந்தவரின் முகம், தலை உள்ளிட்ட பல இடங்களில் ரத்தம் வெளியேறி, வயிறு உப்பிய நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனால், சந்தேகம் அடைந்த உறவினா்கள், இதுகுறித்து கேட்டபோது பிணவறையில் வேலை பாா்க்கும் ஊழியா்களும், அதிகாரிகளும் உரிய பதில் அளிக்கவில்லையாம். இதையடுத்து, அவரது உறவினா்கள் பிணவறை முன்பு வாக்குவாதம் செய்து, போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத்தொடா்ந்து திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் அசோகன் உள்ளிட்டோா், சம்பவ இடத்துக்கு வந்து சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, உறவினா்கள் உடலைப் பெற்றுச் சென்றனா்.
இதுகுறித்து உறவினா்கள் தெரிவித்தது: கோவிந்தராஜ் இறப்பில் சந்தேகம் இல்லை. அவருடைய உடல், பிணவறையில் உள்ள பதப்படுத்தும் பெட்டியில் வைக்கப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறியிருந்தனா். அங்கு எப்படி எலி வந்து உடலை கடித்து இருக்க முடியும் எனத் தெரியவில்லை.
திங்கள்கிழமை மாலையே உடலை தந்திருந்தால், நிம்மதியாக அடக்கம் செய்திருக்க முடியும். இவருடைய உடலைப் போலவே மேலும் பலருடைய உடல்களும் மோசமாக இருக்குமோ என்ற எண்ணம் எழுகிறது. எனவே, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றனா்.