சாலை விதிகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்: அலுவலர்களுக்கு தில்லி பொதுப் பணித் துறை உத்தரவு
தில்லியில் சாலை விதிகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லி அரசின் பொதுப் பணித் துறையானது அதன் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் சாலை விதிகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லி அரசின் பொதுப் பணித் துறையானது அதன் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவானது அண்மையில் பொதுப் பணித் துறையின் தலைமைப் பொறியாளர் சர்வாக்ய ஸ்ரீவாஸ்தவ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்டது. பொதுப் பணித்துறையின் பணிகளை மீளாய்வு செய்யும் வகையில் இக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, சாலை விதிகள் குறைபாடுகள் காரணமாக சாலைகளில் விபத்துகள் நிகழ்வதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்போது, தலைநகரில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமாக உள்ள 1,260 கிலோ மீட்டர் சாலைகளின் மேல்தளத்தையும், சாலை பாதுகாப்பு விதிகளையும் உறுதிப்படுத்த பொதுப் பணித்துறையின் களப் பணியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது.
தில்லியைச் சேர்ந்த சாலைப் போக்குவரத்துக் கல்வி நிறுவனம் தேசிய தலைநகரில் உள்ள 14 முக்கியச் சாலைகளில் கடந்த ஜூனில் ஆய்வு நடத்தியது. அப்போது, சாலைப் போக்குவரத்து விதிகளுக்கு மீறும் வகையில் தகவல் பலகைகள் தவறாக வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, சாலை தகவல் பலகைகளை உரிய வகையில் நிறுவுவது தொடர்பாக பொறியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயிலரங்கிற்கு பொதுப் பணித்துறை ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.