பனி மூட்டத்தால் 13 ரயில்கள் தாமதம்: காற்றின் தரத்தில் சற்று மேம்பாடு
தில்லியில் பனி மூட்டம் காரணமாக திங்கள்கிழமை 13 ரயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டதாக வடக்கு ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.
தில்லியில் பனி மூட்டம் காரணமாக திங்கள்கிழமை 13 ரயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டதாக வடக்கு ரயில்வே அதிகாரி தெரிவித்தார். காற்றின் தரத்தில் சற்று மேம்பாடு காணப்பட்டதாக மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்தது.
தில்லியில் பிப்ரவரி மாதம் தொடங்கியது முதல் குளிர்கால சீசனில் சற்று மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. பகலில் மிதமான வெயிலும் இரவில் மட்டும் குளிரின் தாக்கமும் இருந்து வருகிறது. அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படுகிறது. இதன்காரணமாக ரயில் வருகையில் தாமதம் ஏற்படுகிறது.
திங்கள்கிழமை காலை பனி மூட்டம் வழக்கம்போல் காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸாக இருந்தது. இந்த குளிர்கால சீசனின் சராசரியை விட நான்கு புள்ளிகள் இது அதிகமாகும். பனிமூட்டம் காரணமாக தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு வந்த 13 ரயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டது. குறைந்த காண்புதிறன் காரணமாக நான்கு ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. 12 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், "தில்லியில் வான் பகுதியில் மாற்றம் ஏற்பட்டு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாக பதிவாகும். அடுத்த வாரம் முழுவதும் வானம் பகுதியளவு மேக மூட்டத்துடன் காணப்படும்' என்றார். தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 25.5 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்தது.
காற்றின் தரக் குறியீடு: தில்லியில் திங்கள்கிழமை காற்றின் தரத்தின் சற்று மேம்பாடுடன் காணப்பட்டது.
காற்றின் தரக் குறியீடு 1000 மணிநேரங்களில் 166 புள்ளிகளாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை மிகவும் மோசமான பிரிவில் இருந்த நிலையில் திங்கள்கிழமை மிதமான பிரிவில் காற்றின் தரம் காணப்பட்டதாக மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.புரம் பகுதியில் காற்றின் தரக் குறியீடு 166 புள்ளிகளாகவும், பஞ்பாபி பாக் பகுதியில் 160 புள்ளிகளாகவும், ஐடிஓ பகுதியில் 159 புள்ளிகளாகவும் பதிவாகியிருந்தது. இந்த மூன்று பகுதிகளிலும் ஆரோக்கியமற்ற பிரிவில் வருவது குறிப்பிடத்தக்கதாகும்.