7 பள்ளிகளை மூடும் விவகாரம்: கல்வித் துறை உத்தரவுக்கு எதிரான மனு: மத்திய, தில்லி அரசுகள் பதில் அளிக்க உத்தரவு
தில்லி மத்திய மாவட்டத்தில் ஏழு அருகாமை பள்ளிகளை மூடும் தில்லி கல்வி துறையின் உத்தரவுக்கு எதிராக தாக்கலான மனு மீது மத்திய அரசு
தில்லி மத்திய மாவட்டத்தில் ஏழு அருகாமை பள்ளிகளை மூடும் தில்லி கல்வி துறையின் உத்தரவுக்கு எதிராக தாக்கலான மனு மீது மத்திய அரசு, தில்லி ஆம் ஆத்மி அரசு ஆகியவை பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மித்தல், நீதிபதி சி.ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு தில்லி அரசின் கல்வித் துறை, மத்திய அரசு ஆகியவை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை ஜூலை 27-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
முன்னதாக, இந்த மனு மீதான விசாரணையின் போது தில்லி அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "கல்வித் துறையின் சம்பந்தப்பட்ட உத்தரவின் குறிப்பிட்ட பகுதிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது' என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குரைஞர்-ஆர்வலர் யூசுஃப் நாகி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஏழு பள்ளிகளை மூடும் விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலில், மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருப்பதன் காரணமாக அந்தப் பள்ளிகளை மூடவோ அல்லது வேறு பள்ளிகளுடன் இணைப்பதற்காகவோ கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறையக் காரணம் கல்வி உரிமைச் சட்டத்தின் 8-ஆவது பிரிவின் கீழ் அரசின் சட்டப்பூர்வ கடைமையை செய்யாததேயாகும். இதனால், மக்களின் அடிப்படை உரிமைகளைத் தடுக்கும் வகையில் தில்லி கல்வித் துறை பிறப்பித்துள்ள 7 பள்ளிகளை மூடும் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும். மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை திறன் வாய்ந்த வகையில் நடத்துவதற்கும், பராமரிப்பதற்கும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணையின்போது மனுதாரர் யூசுஃப் நாகி சார்பில் வழக்குரைஞர் ஜி.எம். அக்தர் ஆஜராகி, "கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவு 8-இன்படி, கல்வியை மேம்படுத்துவதும், மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பதற்கு பெற்றோர்களையும், மாணவர்களையும் ஊக்குவிப்பதும் அரசின் கடைமையாகும். அதேசமயத்தில், அரசானது சூழலை உருவாக்கி பள்ளிகளை மூடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன் விளைவாக மாணவர்கள் சம்பந்தப்பட்ட ஏழு பள்ளிகளில் இருந்து விலகும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, அருகாமைப் பள்ளிகளின் எண்ணிக்கை 14-இல் இருந்து ஏழாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது' என்று வாதிட்டார். இதையடுத்து, மேற்கண்ட உத்தரவை நீதிபதிகள் அமர்வு பிறப்பித்தது.