முகப்பு
புதுதில்லி

"தெஹல்கா' ஆசிரியர் மீதான வழக்கு: விரைந்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

"தெஹல்கா' இதழின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு எதிரான பாலியல் வழக்கின் மீதான விசாரணை நடவடிக்கைகளை ஓராண்டுக்குள்

Updated On : 10 ஏப்ரல், 2018 at 4:30 AM
பகிர்:

"தெஹல்கா' இதழின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு எதிரான பாலியல் வழக்கின் மீதான விசாரணை நடவடிக்கைகளை ஓராண்டுக்குள் நிறைவு செய்யுமாறு கோவா நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தருண் தேஜ்பாலின் மனுவுக்கு உரிய பதிலளிக்குமாறும் கோவா அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெண் பத்திரிகையாளர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் தருண் தேஜ்பால் கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் பிணையில் வெளியே வந்தார்.
இந்நிலையில் தன் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யக் கோரி தருண் தேஜ்பால் தாக்கல் செய்தார். அந்த மனுவை மும்பை உயர் நீதிமன்றத்தின் கோவா கிளை கடந்த ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி நிராகரித்துவிட்டது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இவ்வழக்கின் சாட்சிகளை மீண்டும் விசாரணைக்குட்படுத்துமாறு கோவா நீதிமன்றத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில், அந்த மனு,  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி,  அசோக் பூஷண் ஆகியோர் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணக்கு வந்தது. அப்போது தருண் தேஜ்பால் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், "வழக்கின் முக்கிய ஆவணங்களையும், சாட்சியங்களையும் கீழமை நீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை' என்று தெரிவித்தார். மேலும், வழக்கு விசாரணை தாமதமாவதாகவும் கூறினார். இதையடுத்து வழக்கின் விசாரணை நடைமுறைகளை விரைந்து முடிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக கோவா அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.