நாணயவியல், தபால்தலை கண்காட்சி தொடக்கம்
தில்லியில் நாணயவியல், தபால்தலை கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது. இந்நிகழ்ச்சியை துணை முதல்வர் மணீஷ்
தில்லியில் நாணயவியல், தபால்தலை கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது. இந்நிகழ்ச்சியை துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தொடங்கிவைத்தார். இக்கண்காட்சியில் இந்தியாவின் பழங்கால நாணயங்கள் மற்றும் 100 நாடுகளின் கரன்ஸிகள், தபால்தலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தில்லியில் உள்ள அகில இந்திய நுண்கலை மற்றும் கைவினைச் சங்கத்தில் ஏழு நாள் நடைபெறும் இக்கண்காட்சிக்கு ராயல் நாணயவியல் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பேசுகையில், வரலாற்றை நேரடியாக தெரிந்துகொள்வதற்கு நாணயங்கள் நமக்கு உதவுகின்றன' என்றார்.
இதுகுறித்து ராயல் நாணயவியல் சங்கத்தினர் தெரிவித்திருப்பதாவது: இக்கண்காட்சியில் தில்லியின் கி.மு. 4-6 முதல் 1947-ஆம் ஆண்டு வரையிலான கால வரிசையிலான நாணயங்கள் குறித்த விவரங்களைப் பார்வையாளர்கள் தெரிந்து கொள்ளலாம். கலைப் படைப்புகளின் மூலம், தலைநகரின் வளர்ச்சியையும் அறிந்துகொள்ள முடியும். இக்கண்காட்சியில் இந்தியக் குடியரசின் தபால்தலைகள், நோட்டுகள், நாணயங்களுடன்கூடிய செவ்வியல் நாணயவியல் அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, பல்வேறு வெளிநாடுகளின் நாணயங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், புகழ்ப்பெற்ற ஓவியக் கலைஞர்களின் வரலாறு, அழகும் வாய்ந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சச்சின் டெண்டுல்கரின் உருவம் பொறித்த நாணயமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வரலாற்று ஆர்வலர்களுக்காக இலவச கல்வித் திட்டங்களும் இடம் பெற்றுள்ளன. மேலும், பேராசிரியர் கௌதம் ஜந்த்கல் பங்கேற்கும் பயிலரங்கம், முன்னணி நாணயவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மூலம் வரலாற்று கரன்ஸிகள், நாணயங்கள் தொடர்பான கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.