முகப்பு
புதுதில்லி

வர்த்தகக் கண்காட்சியில் பார்வையாளர்களைக் கவரும் தமிழக அரங்கம்!

தில்லி பிரகதி மைதானில் நடைபெற்று வரும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள தமிழக

Updated On : 22 நவம்பர், 2018 at 6:19 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 11:11 PM

தில்லி பிரகதி மைதானில் நடைபெற்று வரும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள தமிழக அரங்கம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
தில்லி பிரகதி மைதானில் 38-வது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி கடந்த 14- ஆம் தேதி தொடங்கியது. நவம்பர் 27-ஐஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் பல்வேறு மாநிலங்கள் தங்களது மாநிலங்களின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் அரங்குகளை  அமைத்துள்ளன. அந்த வகையில், தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள், சிறப்புகள் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தின் பல்வேறு துறை சார்பில் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 தமிழக அரங்கிற்குள் நுழைபவர்களை செய்தி மக்கள் தொடர்புத் துறை அரங்கு வரவேற்கிறது. இதில் தமிழகம் தொடர்பான அனைத்து அடிப்படைத் தகவல்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தொட்டில் குழந்தைத் திட்டம், அம்மா உணவகத் திட்டம், பசுமை வீட்டுத் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம் உள்ளிட்டவையும் அதனால், மக்கள் அடைந்த நன்மைகளும் மாதிரிகளாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 
 இது தொடர்பாக தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை நிர்வாக அலுவலர்கள் சிரீஸ் பாபு, வெங்கட சுப்பிரமணியம் கூறுகையில், "வெறும் விற்பனை அரங்காக மட்டும் இல்லாமல், மற்ற மாநில மக்களுக்கு தமிழகத்தின் பெருமைகளைக் கூறும் வகையிலும், தமிழகத்தின் பால் முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கும் வகையிலும், இந்த அரங்கைத் திட்டமிட்டு வடிவமைத்துள்ளோம்' என்றனர். 
தமிழக சுற்றுலாத்துறையின் சார்பில் தமிழகத்தில் உள்ள, பிரபலமான சுற்றுலா ஸ்தலங்களான தஞ்சைப் பெரிய கோயில், மாமல்லபுரம், தாராசுரம், உள்ளிட்ட இடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பிற மாநில சுற்றுலாப் பயணிகள் இந்த இடங்களுக்கு எவ்வாறு செல்லலாம், எங்கே தங்கலாம் உள்ளிட்டவை தொடர்பான தகவல்களும் வழங்கப்படுகின்றன. தமிழக தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் காட்டுப்பள்ளி சிறு கப்பல் கட்டும் தளம், பாலிமர் இன்டஸ்ட்ரி போன்றவை குறித்த தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கே, தமிழகத்தில் எந்தெந்த வகையில் முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்ற விளக்கமும் வழங்கப்படுகிறது.
தோட்டக்கலை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் பார்வையாளர்களைப் பெரிதும் கவரும் வகையில் கிராமப் பெண்ணொருவரின் ஆளுயர அளவிலான சிலை வைக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், தென்னைப் பொருள்களில் இருந்து உருவாக்கப்படும் நீரா பானம், நீரா சர்க்கரை, நீரா வெல்லம், தேங்காய் எண்ணெய், ஆகியன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 இது தொடர்பாக வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை உதவிச் செயலர் சங்கர சுப்பிரமணியம் கூறுகையில், "தென்னம் பொருள்களை அதிகளவில் காட்சிப்படுத்தியுள்ளோம். நீரா பானத்தை மக்கள் அதிகளவில் ஆவலுடன் அருந்திச் செல்கின்றனர். தேங்காய் சர்க்கரைக்கும் வரவேற்பு உள்ளது. இந்தப் பொருள்களை மற்றைய மாநிலங்களுக்கு விற்கும் வகையில் முகவர்களுடன் பேசி வருகிறோம்' என்றார்.
மேலும், தமிழகத்தின் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் சேலை, சுடிதார் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் சாமை, தினை, குதிரை வாலி, வரகு, கம்பு போன்ற சிறுதானியங்களும், அவற்றில் இருந்து செய்யப்பட்ட தின்பண்டங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தானியங்களால் செய்யப்பட்ட பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் உருவப்படங்கள் பார்வையாளர்களைக் கவரும் வகையில் உள்ளது.
 வர்த்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரங்கிற்காக தமிழக அதிகாரிகள் சுமார் 50 பேர் கடந்த 10 தினங்களாக தில்லியில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.