முகப்பு
புதுதில்லி

வளர்ச்சிக் கொள்கைகளை  மக்கள் ஏற்றுக் கொண்டனர்: காங்கிரஸ் கருத்து

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் - மதச் சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கூட்டணி அரசின் வளர்ச்சிக் கொள்கைகளை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்

Updated On : 4 செப்டம்பர், 2018 at 12:58 AM
பகிர்:

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் - மதச் சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கூட்டணி அரசின் வளர்ச்சிக் கொள்கைகளை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:
கர்நாடகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம், காங்கிரஸ் மீது மக்கள் மீண்டும் ஒருமுறை நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இதற்காக, மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், மாநிலத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசின் வளர்ச்சிக் கொள்கைகளை மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர். பாஜகவின் வெற்று வாக்குறுதிகளை அவர்கள் நிராகரித்து விட்டனர். உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த சுட்டுரைப் பதிவில் சுர்ஜேவாலா குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வந்தபோதிலும், உள்ளாட்சித் தேர்தலில் இவ்விரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன. மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்படி, காங்கிரஸ் 966 இடங்களிலும், பாஜக 910 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மஜத கட்சி 373 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.