தில்லி மெட்ரோவில் மெஜந்தா வழித்தடத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் சுமார் 1மணி நேரம் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்து சமிக்ஞையில் ஏற்பட்ட கோளாறுதான் இதற்குக் காரணம் என தில்லி மெட்ரோ ரயில் நிறுவன (டிஎம்ஆர்சி) வட்டாரங்கள் தெரிவித்தன.
தில்லி கால்காஜி மந்திர் முதல் பொட்டானிக்கல் கார்டன் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடம் மெஜந்தா வழித்தடம் என அழைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் உள்ள ஜசோலா விஹார் மெட்ரோ ரயில் நிலையத்தில் போக்குவரத்து சமிக்ஞையில் செவ்வாய்க்கிழமை காலையில் திடீரென கோளாறு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, கால்காஜி மந்திர் - பொட்டானிக்கல் கார்டன் வரையிலான மெஜந்தா வழித்தடத்தில் ரயில் சேவை காலை 7.25 முதல் காலை 8.30 மணி வரையில் பாதிக்கப்பட்டது. இதனால், அலுவலகம் செல்வோர், கல்லூரி, பள்ளி செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதே வழித்தடம் 8-ஐ சேர்ந்த ஜனக்புரி முதல் கால்காஜி மந்திர் வரையிலான மெஜந்தா வழித்தடத்தில் ரயில் சேவையில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று டிஎம்ஆர்சி வட்டாரங்கள் தெரிவித்தன.