தில்லி துவாரகா மெட்ரோ ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பயணி ஒருவர் ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: போலீஸார் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் இருந்த போது, செல்லிடப்பேசியில் ஒருவர் தொடர்பு கொண்டார். துவாரகா மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒருவர் ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறினார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ள்ளனர். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து புளு லைன் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இந்தப் பாதிப்பு தொடர்பாக பயணிகளுக்கு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தனது சுட்டுரையில் தகவல் தெரிவித்தது.
அதில், "ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் துவாரகா, மேற்கு ஜனக்புரி இடையே ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற வழித்தடங்களில் ரயில் சேவை வழக்கம் போல் இருக்கிறது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.