கிழக்கு தில்லி குடியிருப்புவாசிகளுக்கு சேவை அளிக்கும் வகையில் புதிதாக மின்னணு சார்பதிவாளர் அலுவலகம், மின்னணு மாவட்ட மையமும் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இவற்றை தில்லி அரசின் வருவாய்த் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் திறந்துவைத்தார். கிழக்கு தில்லியில் கீதா காலனியில் பழைய கட்டடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், பழைய கட்டடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் ரூ.8.67 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இந்த மின்னணு சார் பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு ஆவணங்கள் பதிவுக்காக மின்னணு சார் பதிவாளரை சந்திப்பதற்கான அனுமதியை இணையதளம் வாயிலாக பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 40 முதல் 50 ஆவணங்கள் கீதா காலனி, மயூர் விஹார், ஜகத்புரி, கிச்சரிபூர், தல்லுபுரா, கோண்ட்லி, வசுந்தரா என்கிளேவ், காமன்வெல்த் விளையாட்டு கிராமம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் மூலம் இந்த அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்தப் புதிய கட்டடம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள பாகிதாரி அரங்கம் அண்மையில் புதுப்பிக்கப்பட்டது. அந்த அரங்கம் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் மின்னணு மாவட்ட மையமாக மாற்றப்பட்டுள்ளது. மின்னணு மாவட்ட மையமானது பட்பர்கஞ்ச், கோண்ட்லி, லட்சுமி நகர், கிருஷ்ண நகர், திரிலோக்புரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு சேவை அளிக்கும். இந்த அரங்கில் டோக்கன் அளிக்கும் இயந்திரம், எல்சிடி திரை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் அமர்வதற்குத் தேவையான இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஜாதி, வருவாய், உறைவிடம், திருமணச் சான்றிதழ்கள் வழங்குவதற்கான வசதியும் உள்ளதாக தில்லி அரசின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.