முகப்பு
புதுதில்லி

வீடற்றவர்களுக்கு பயனளிக்கும் இரவு நேரக் குடில்கள்!

தில்லியில் செயல்பட்டு வரும் இரவு நேரக் குடில்கள் மூலம் தினமும் வீடற்ற சுமார் 12,000 பேர் பயனடைந்து வருவதாகத் தெரிய வந்துள்ளது.

Updated On : 21 ஜனவரி, 2019 at 7:38 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 12:25 PM

தில்லியில் செயல்பட்டு வரும் இரவு நேரக் குடில்கள் மூலம் தினமும் வீடற்ற சுமார் 12,000 பேர் பயனடைந்து வருவதாகத் தெரிய வந்துள்ளது.
தில்லியில் நிலவும் கடும் குளிரால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வீடற்றவர்கள் இந்தக் குளிரால் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். தில்லியில் குளிர்காலத்தில் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பாக ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கான இயக்கம் அண்மையில் கணக்கெடுப்பு நடத்தியது. இதன்படி, 45 நாள்களில் 331 வீடற்றவர்கள் குளிரால் உயிரிழந்துள்ளனர் என்றும்; கடந்த 2018, டிசம்பரில் மட்டும் 200 பேர் குளிரால் உயிரிழந்துள்ளனர் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தில்லியில் இரவு நேரத் தங்கும் குடில்கள் முழு மூச்சுடன் இயங்கி வருகின்றன என்றும், இந்தக் குடில்களில் வீடற்றவர்கள் நாளொன்றுக்கு சுமார் 12,000 பேர் தங்குகின்றனர் என்றும் தில்லி நகர்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியம்  தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த வாரியத்தின் தலைமை பொறியாளர் அருண் சர்மா கூறியதாவது: தில்லியில் 248 இரவு நேரத் தங்கும் குடில்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 76 குடில்கள் நிரந்தரக் கட்டடங்களிலும்,  172 குடில்கள் தற்காலிக கூடாரங்களிலும் இயங்கி வருகின்றன. இந்தக் குடில்களில் ஒரே நேரத்தில் சுமார் 17,645 பேர் தங்கும் அளவுக்கு  வசதி செய்யப்பட்டுள்ளது.  ஆனால், இந்தக் குடில்களில் சராசரியாக தினம்தோறும் 12,000 பேர்தான்  தங்குகின்றனர்.  
இந்தக் குடில்களில் கழிப்பிட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. வாரத்துக்கு 2 தடவை மருத்துவர்கள் இந்த முகாம்களுக்கு வந்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்கின்றனர். இந்தக் குடில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகவும், காலியாக உள்ள அரசு, மாநகராட்சிகளுக்குச் சொந்தமான கட்டடங்களை தற்காலிக குடில்களாக பயன்படுத்துவது தொடர்பாகவும் விவாதித்து வருகிறோம். மேலும், சுகாதாரத் துறை, தில்லி ஜல்போர்டு, மாநகராட்சிகள் உள்ளிட்ட துறைகளுடன் சேர்ந்து இந்தக் குடில்களை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம்.
பெண்கள் மட்டும் தங்கும் வகையிலான குடில்களும் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குடில்களுக்குள் ஆண்களுக்கு அனுமதி இல்லை. மேலும் இந்தக் குடில்களில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. 
ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கான இயக்கம், தில்லியில் 45 நாள்களில் 331 வீடற்றவர்கள் குளிரால் உயிரிழந்துள்ளனர் என எவ்வித அடிப்படையும் இல்லாமல் தவறான குற்றச்சாட்டை முன்வைக்கிறது. தில்லியில் மீட்கப்பட்ட அடையாளம் காணப்படாத சடலங்களை குளிரால் இறந்தவர்கள் என்று அந்த இயக்கம் தவறாக பொய்யுரை செய்கிறது.  தில்லியில் உள்ள வீடற்றவர்களை மீட்க 16 மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

உதவி எண்கள்
தெருக்களில் தங்கியிருக்கும் வீடற்றவர்களை மீட்கும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 011-23378789,  011-23370560,  8527898295 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். 

கட்டுப்பாட்டு அறை
மீட்புப் பணிகளைக் கண்காணிக்கும் வகையில்,  தில்லி ஐபி எஸ்டேட்டில் அமைந்துள்ள  டியுஎஸ்ஐபியின் தலைமைக் கட்டடமான புனர்வாஸ் பவனில் சிறப்புக் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறை 24 மணி நேரமும்  செயல்படும்.

Advertisement

வசதிகள் என்னென்ன?
1. படுக்கை
2. போர்வை
3. தலையணை
4. குடிநீர்
5. கழிப்பறைகள்
6. தேநீர்
7. பிஸ்கட்
8. மின்சாரம்
9. தொலைக்காட்சி


16 மீட்புக் குழு
குளிர் காலத்தில் தினமும் இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 2 மணி வரையிலும்  தில்லியில் தெருக்களில் தங்கும் வீடற்றவர்களை மீட்க 16 மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு குழுவுக்கும் ஓட்டுநர், 2 உதவியாளர்களுடன் ஒரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தெருக்களில் தங்குவோரை மீட்டு குடில்களில் தங்கவைப்பர். 

கண்காணிப்புக் குழு 
இரவு நேரக் குடில்களையும்  மீட்புப் பணிகளையும் கண்காணிக்க 3 அடுக்கு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.  முதல் அடுக்கில் டியுஎஸ்ஐபி தலைவர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், இரண்டாம் அடுக்கில் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள், மூன்றாம் அடுக்கில் பிராந்திய பொறியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

செல்லிடப்பேசி செயலி
மீட்புப் பணிகளுக்காகப் பிரத்யேகமாக தஅஐச ஆஅநஉதஅ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. வீடற்றவர்கள் தொடர்பான தகவல்களை இந்த செயலி மூலம் கட்டுப்பாட்டு  அறைக்கு நேரடியாக வழங்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.