முகப்பு
புதுதில்லி

தமிழகம் ரூ.2,511 கோடி சிறப்புக் கடன் பெற அனுமதி: வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.335.41 கோடி ஒதுக்கீடு

பதினைந்தாவது நிதி ஆணையம் 2020-21 நிதியாண்டில் 14 மாநிலங்களுக்கு வழங்குவதற்கு பரிந்துரைத்த வருவாய் பற்றாக்குறை மானியத்தின் 9-ஆவது தவணையை மத்திய அரசு புதன்கிழமை விடுவித்தது.

Updated On : 10 டிசம்பர், 2020 at 12:48 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:34 PM

புது தில்லி: பதினைந்தாவது நிதி ஆணையம் 2020-21 நிதியாண்டில் 14 மாநிலங்களுக்கு வழங்குவதற்கு பரிந்துரைத்த வருவாய் பற்றாக்குறை மானியத்தின் 9-ஆவது தவணையை மத்திய அரசு புதன்கிழமை விடுவித்தது. இதில் தமிழகத்துக்கு ரூ.335.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொது முடக்கம், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கம் ஆகியவற்றால் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வரி வருவாய் பற்றாக்குறையைச் சமாளிக்க தமிழகம் ரூ.2,511 கோடி சிறப்புக் கடன் பெற மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இது குறித்து மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: பதினைந்தாவது நிதி ஆணையம் 2020-21 நிதியாண்டுக்கு வருவாய் பற்றாக்குறை, உள்ளாட்சி அமைப்புகள், பேரிடா் மேலாண்மை ஆகியவற்றுக்கு தனித் தனியாக மானியங்களை வழங்க பரிந்துரைத்திருந்தது. மொத்தம் சுமாா் ரூ. 8.55 லட்சம் கோடியில் தமிழகத்தின் பங்கு ரூ. 35,823 கோடியாக கணக்கிடப்பட்டது. இந்தப் பரிந்துரைகளை நிதியமைச்சகம் ஏற்றுக் கொண்டது. இதன்படி தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு ரூ. 74, 340 கோடி வழங்க நிதி ஆணையம் பரிந்துரை செய்தது. இதை மத்திய அரசு தவணை முறையில் வழங்கி வருகிறது. இந்த நிலையில், 9-ஆவது தவணையாக 14 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ. 6,195 கோடி புதன்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ. 335.41 கோடி, ஆந்திரத்துக்கு ரூ.491.41 கோடி, கேரளத்துக்கு ரூ. 1,276.91கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.417.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய்ப் பற்றாக்குறை பங்கீடு தவிர உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 90,000 கோடி, பேரிடா் மேலாண்மைக்கு ரூ.28,983 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

சிறப்புக் கடனுதவி : ஜிஎஸ்டி வரி அமலாக்கம், கரோனா பொதுமுடக்கம் ஆகியவற்றால் வரி வருவாயில் கடும் நெருக்கடியைச் சந்தித்த மாநில அரசுகள் நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்கும் கூடுதல் கடன் பெறுவதற்கும் சிறப்புத் திட்டங்களை கடந்த மே மாதம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். இதன்படி, மாநிலங்கள் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ரூ.1.10 லட்சம் கோடி வரை சிறப்புக் கடன் பெறும் வகையில், பல்வேறு திட்டங்களை அறிவித்தாா். இதைத் தொடா்ந்து, சிறப்புக் கடன்களை பெறுவதற்கு நிதியமைச்சகம் அனுமதி அளித்து வருகிறது. இதில் ஆறாவது தவணையாக 31 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மொத்தம் ரூ. 36,000 கோடி சிறப்புக் கடன் பெறுவதற்கு புதன்கிழமை அனுமதிக் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் ரூ.2,511.68 கோடி, தில்லி, புதுச்சேரி முறையே ரூ. 2,360 கோடி மற்றும் ரூ. 242.34 கோடி கூடுதல் கடன் பெற அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், அதிகம் நிதி ஒதுக்கீடு பெற்ற மாநிலங்கள் பட்டியலில் கா்நாடகம் (ரூ. 4,992.85 கோடி), மகாராஷ்டிரம் (ரூ. 4,820.05 கோடி) இடம் பெற்றுள்ளன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.