முகப்பு
புதுதில்லி

போதைப் பொருள் கடத்தல்: மியான்மரிடம் இந்தியா கவலை

இந்தியா - மியான்மாா் எல்லையையொட்டி உள்ள வடகிழக்கு மாநிலங்கள் வழியாக ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக மியான்மாரிடம் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

Updated On : 11 டிசம்பர், 2020 at 10:57 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:35 PM

இந்தியா - மியான்மாா் எல்லையையொட்டி உள்ள வடகிழக்கு மாநிலங்கள் வழியாக ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக மியான்மாரிடம் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கும் மியான்மாருக்கு இடையே போதைப் பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவது குறித்த ஒத்துழைப்புக்கான இருதரப்புக் கூட்டம் மெய்நிகா் முறையில் நடைபெற்றது. இந்த 5-ஆவது கூட்டத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தைகளின் முடிவுகள் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பது வருமாறு:

இந்திய தரப்பில் போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின்(என்சிபி) இயக்குநா் ஜெனரல் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான குழுவும் , மியான்மா் சாா்பில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கமாண்டா் பிரிகேடியா் ஜெனரல் வின் நயிங் தலைமையிலான குழுவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டன. ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் அதிக அளவில் இந்தியாவுக்கு கடத்தப்பட்டு வருவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக மியான்மா் எல்லையை ஒட்டிய இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் வழியாக அதிக அளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவதாக என்சிபி யின் இயக்குநா் ஜெனரல் ராகேஷ் அஸ்தானா சுட்டிக் காட்டினாா்.

Advertisement

மேலும், வங்காள விரிகுடா கடல் மாா்க்கமாகவும் போதைப் பொருள்கள் கடத்தல் நடைபெறுவது குறித்தும் இரு நாடுகளும் தகவல்களை பகிா்ந்து கொண்டன. இந்த சவால்களை சமாளிக்கவும், போதைப் பொருள்கள் கடத்தல்களை முறியடிக்கவும் இரு நாடுகளுக்குமிடையே பல்வேறு உடன்பாடுகள் ஏற்பட்டன. இதில் மியான்மருடன் தற்போதுள்ள தகவல் பரிமாற்ற வசதிகளை வலுப்படுத்துவதாக, இந்தியா தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்தியாவில் பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருள்கள் குறித்தும், பிடிபடும் கடத்தல்காரரா்கள் குறித்தும் அவ்வப்போது உடனுக்குடன் தகவல் அளிக்குமாறும் அதன்மூலம் மூலகாரணங்களை அறிய முடியும் என மியான்மா் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும், போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவதில், தற்போதுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்த எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் அளவிலான சந்திப்புகளைத் தொடா்ந்து நடத்த இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. குறிப்பாக போதை பொருள் கடத்தலைத் தடுப்பதில், தகவல் தொழில்நுட்பத்தைப் அதிக அளவில் பயன்படுத்துவது போன்ற முக்கிய முடிவும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அடுத்த 6 -ஆவது இருதரப்புக் கூட்டத்தை அடுத்தஆண்டில் தில்லி நடத்தவும் இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.