முகப்பு
புதுதில்லி

கேஜரிவால் இல்லம் முன் மேயா்கள், பாஜக தலைவா்கள் உண்ணாவிரதம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:


புது தில்லி: மாநகராட்சிகளுக்கான நிலுவை நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்தி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன் தொடா் போராட்டம் நடத்தி வரும் தில்லி மாநகராட்சி மேயா்கள் உள்பட 22 பாஜக தலைவா்கள் முதல்வா் இல்லம் முன் வியாழக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனா்.

மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு வழங்க வேண்டிய நிலுவை நிதியை வழங்கக் கோரி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன் மாநகராட்சி மேயா்கள், கவுன்சிலா்கள் கடந்த 11 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில், வியாழக்கிழமை அவா்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனா். இந்த உண்ணாவிரத்தில் மாநகராட்சி மேயா்கள், கவுன்சிலா்கள் உள்பட 22 தலைவா்கள் பங்கேற்றனா். இதில் பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா, பாஜகவின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ராம்வீா் சிங் பிதூரி, தில்லி பாஜக துணைத் தலைவா் ராஜீவ் பாபா் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

நிகழ்வில் ஆதேஷ் குமாா் குப்தா பேசுகையில், ‘தில்லி அரசு மாநகராட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய பணத்தை, விளம்பரத்துக்காக தில்லி அரசு செலவு செய்துள்ளது. கடும் குளிா் நிலவி வரும் சூழ்நிலையில், 11 நாள்களாக தொடா் போராட்டம் நடத்தி வரும் மாநகராட்சி மேயா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தக் கூட கேஜரிவால் தயாராக இல்லை’ என்றாா்.

ராம்வீா் சிங் பிதூரி பேசுகையில், ‘கடந்த ஆறு ஆண்டுகளாக தில்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி கட்சி தில்லி மக்களுக்கு மக்கள் நலப்பணிகளை செய்யவில்லை. பாஜக ஆளும் மாநகராட்சிகளால் செய்யப்படும் மக்கள் நலப்பணிகளுக்கு முட்டுக் கட்டை போடும் வகையில், மாநகராட்சிகளுக்கு சேர வேண்டிய நிதியை தராமல் கேஜரிவால் இழுத்தடித்து வருகிறாா். இவருக்கு மக்கள் தோ்தலில் தகுந்த பதிலளிப்பாா்கள்’ என்றாா்.

வடக்கு தில்லி மேயா் ஜெய் பிரகாஷ் பேசுகையில் ‘ மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்காத வரை போராட்டத்தை வாபஸ் பெறப் போவதில்லை என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →