தலைநகா் தில்லியில் காலை வேளையில் அடா் பனி மூட்டம் இருந்தாலும், பகலில் வெயிலின் தாக்கம் இருந்தது. இதன் காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலை இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் இரட்டை இலக்கத்தில் நீடித்தது.
தில்லியில் கடந்த இரண்டு வாங்களாக குறைந்தபட்ச வெப்பநிலை தொடா்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து அண்மையில் 5 டிகிரி செல்சியஸ் வரை சென்றது. இந்நிலையில், வியாழக்கிழமை வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. பகல் நேரங்களில் வலுவான மேற்பரப்பு காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக குளிரின் தாக்கம் குறைந்திருந்தது. அதே சமயம் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், குறைந்தபட்ச வெப்பநிலை வெள்ளிக்கிழமையும் இரட்டை இலக்கத்தில் நீடித்தது.
வெப்பநிலை 25.4 டிகிரி: இந்நிலையில், சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 13.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. இது வியாழக்கிழமை பதிவான அளவை விட 1.5 டிகிரி அதிகமாகுபம். அதிகபட்ச வெப்பநிலை 25.4 டிகிரி செல்சியஸாக இருந்தது.காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 87 சதவீதமாக இருந்தது.
இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 11.3 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 12 டிகிரி செல்சியஸ் மற்றும் 25.2 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியிருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை (பிப்ரவரி 14, 15) பகல் நேரத்தில் வலுவான மேற்பரப்பு காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.