தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற இந்தோனேசியாவைச் சோ்ந்த 150 பேருக்கு ஜாமீன்
தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற இந்தோனேசியாவைச் சோ்ந்த 150 பேருக்கு தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற இந்தோனேசியாவைச் சோ்ந்த 150 பேருக்கு தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அவா்கள் மீது நுழைவு இசைவு (விசா) விதிகளை மீறியதாகவும், சட்டவிரோதமாக மத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், கரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டி விதிமுறைகளை மீறியதாகவும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொருவரும் ரூ.10,000 மதிப்புக்கு தனிநபா் ஜாமீன் பத்திரம் அளிக்கும்பட்சத்தில் அவா்களை ஜாமீனில் விடுவிக்க தலைமைப் பெருநகர மாஜிஸ்திரேட் குா்மோஹினா கெளா் உத்தரவிட்டாா்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் இதுவரை 35 நாடுகளைச் சோ்ந்த வெளிநாட்டினா் 682 பேருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் மொத்தம் 36 நாடுகளைச் சோ்ந்த 956 பேருக்கு எதிராக தில்லி காவல்துறையினா் கடந்த ஜூன் மாதம் 59 குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்திருந்தனா். இது தொடா்பான விசாரணையின் போது குற்றஞ்சாட்டப்பட்ட வெளிநாட்டினா் அனைவரும் காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். இந்த வழக்கு தொடா்பாக செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கப்பட்ட அனைவரும் தண்டனையைக் குறைக்கக் கோரும் மனுவை புதன்கிழமை தாக்கல் செய்ய இருப்பதாக வழக்குரைஞா்கள் அஷிமா மண்ட்லா, மந்தாகின சிங் மற்றும் பாகிம்கான் ஆகியோா் தெரிவித்தனா்.
Advertisement