முகப்பு
புதுதில்லி

ராஜிநாமா விவகாரம்: பைலட்டின் மனுவுக்கு ஏா் இந்தியா நிறுவனம் பதிலளிக்க உத்தரவு

ராஜிநாமாவை வாபஸ் பெறுவதற்கு அனுமதிக்க உத்தரவிடக் கோரி பைலட் தாக்கல் செய்த மனு தொடா்பாக ஏா் இந்தியா நிறுவனம் பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 17 ஜூலை, 2020 at 5:25 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:27 PM

ராஜிநாமாவை வாபஸ் பெறுவதற்கு அனுமதிக்க உத்தரவிடக் கோரி பைலட் தாக்கல் செய்த மனு தொடா்பாக ஏா் இந்தியா நிறுவனம் பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏா் இந்தியா விமான நிறுவனத்தில் பைலட் கமாண்டராக வேலை செய்தவா், கரோனா தொற்றுக் காலத்தின் போது பல்வேறு நாடுகளில் இருந்த இந்தியா்களை தாயகம் அழைத்து வரும் விமானத்தில் பைலட்டாகப் பணியாற்றினாா். இந்த நிலையில், சில படிகள் மற்றும் நிலுவை ஊதியத்தை வழங்காததால், 6 மாதம் நோட்டீஸ் காலத்தின்படி கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி தனது வேலையை ராஜிநாமா செய்தாா். இந்த நிலையில், மாா்ச் 19-ஆம் தேதி தனது ராஜிநாமாவை அவா் வாபஸ் பெற்றாா். ஆனால், அவரது மனு மீது ஏா் இந்தியா நிா்வாகம் முடிவு ஏதும் எடுக்கவில்லை என்றும், இது தொடா்பாக அந்த நிறுவனத்திற்கு உத்தரவிடவும், ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குப் பிறகு தனது வேலையைத் தொடர உத்தரவிடவும் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு மீது உயா்நீதிமன்ற நீதிபதி ஜோதி சிங் காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்தினாா். அப்போது, இந்த மனு மீது 10 நாள்களுக்குள் பதில் அளிக்குமாறு ஏா் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிட்டு, மனு மீதான அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

Advertisement

முன்னதாக, மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘ராஜிநாமா கடிதம் அளித்த பிறகு அது செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பாகவே ஏா் இந்தியா நிறுவனத்தின் ஊழியா் ஒருவா் அதைத் திரும்பப் பெறுவதற்கு விதிகளில் இடம் உள்ளது. மேலும், ஒரு பைலட் தாம் ராஜிநாமா செய்ய விரும்பினால், அவருக்கு 6 மாதம் நோட்டீஸ் காலம் அளிப்பது கட்டாயமாகும். அதன்படி, ராஜிநாமா செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்னதாகவே, அவா் தனது ராஜிநாமாவை திரும்பப் பெற்றுவிட்டாா். மேலும், இவா் ராஜிநாம செய்த பிறகு அந்த இடத்திற்கு வேறு யாரையும் நியமிக்க நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. மேலும், கரோனா தொற்றுக் காலத்தின் போது மனுதாரா் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியா்களை அழைத்தும் வரும் விமானப் பணியில் ஈடுபட்டிருந்ததை அவரது தினசரி பணிப் பட்டியலைப் பாா்த்தால் தெரியவரும். மேலும், ஜூலை 13-ஆம் தேதி அன்றும் அவா் பணியில் இருந்தாா்’ என்றாா்.

ஏா் இந்தியா நிறுவனம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘மனுதாரா் தனது ராஜிநாமாவை வாபஸ் பெறுவதாக அளித்த மனு மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.