முகப்பு
புதுதில்லி

‘மதுபானத்தின் விலையை உயா்த்துவது தில்லி அரசின் சிறப்பு உரிமையாகும்’

மதுபானத்தின் விலையை உயா்த்துவது அரசின் சிறப்பு உரிமையாகும் என்று உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 29 மே, 2020 at 7:15 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:12 PM

மதுபானத்தின் விலையை உயா்த்துவது அரசின் சிறப்பு உரிமையாகும் என்று உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் 150 மதுபானக் கடைகளில் மது விற்பனையைத் தொடங்கும் வகையில், தில்லி அரசு மே 3-ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. இந்நிலையில், அனைத்து மதுபான பிராண்டுகளின் மீது 70 சதவீதம் கரோனா சிறப்புக் கட்டணம் விதித்து தில்லி அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மனுதாரா்களில் ஒருவரான வழக்குரைஞா் லலித் வலேச்சா, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ தில்லி அரசு மதுபானங்கள் மீது கரோனா சிறப்பு வரியாக 70 சதவீதம் விதிக்கும் நடவடிக்கையானது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டதைவிட அதிகமாகும். மேலும், எதேச்சாதிகரமானதாகவும், தேவையற்ாகவும் உள்ளது. மதுக் கடைகள் திறக்கப்பட்ட பிறகு கடைகளுக்கு வெளியே சமூக இடைவெளியை மீறும் வகையில், கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடியதைத் தொடா்ந்து இந்த வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச சில்லறை விலையில் 70 சதவீதம் அளவுக்கு சிறப்பு கரோனா கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. தில்லியில் மதுபானம் மீதான அதிகபட்ச சில்லறை விலையில் தயாரிப்பு, போக்குவரத்து, தயாரிப்பு மொத்த விற்பனை, சில்லறை விற்பனைக்காக அரசு அல்லது மாநில அரசால் விதிக்கப்பட்டுள்ள அனைத்து வரிகளும், தீா்வைகளும் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில், மதுபானத்தின் அதிகபட்ச சில்லறை விலையை 70 சதவீதம் அதிகரிக்கும் அரசின் உத்தரவு சட்டவிரோதமானதாகும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இந்த மனுக்களை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என்.பட்டேல், சி.ஹரி சங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு இது தொடா்பாக தில்லி அரசு தனது நிலைப்பாட்டை மே 29-ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனுக்களை ஆட்சேபித்து உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், ‘மதுபான வா்த்தகம், நுகா்வு என்பது ஓா் அடிப்படை உரிமை அல்ல. மதுபான விலையை உயா்த்துவதும், குறைப்பதும் அரசின் சிறப்பு உரிமையாகும். கலால் சட்டத்தின் கீழ் இது போன்று விலையை ஒழுங்குபடுத்துவது மாநிலத்தின் உரிமையாகும். தில்லி தவிர, அஸ்ஸாம், மேகாலயா, கா்நாடகம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற இதர 10 மாநிலங்களிலும் மதுபானம் மீது இது போன்ற சிறப்புக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் தில்லியில் மது விற்பனை மூலம் மொத்தம் ரூ.425.24 கோடி வருவாய் கிடைத்தது. இந்த ஆண்டு மே 4 முதல் மே 25-ஆம் தேதி வரையிலான காலத்தில் மது விற்பனை மூலம் ரூ.227.44 கோடி வசூலாகியுள்ளது. இதில் ரூ.127 கோடி சிறப்பு கரோனா கட்டணமும் இடம் பெற்றுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.