பஞ்சாபில் பயிா்க் கழிவு எரிப்பு 46.5 சதவீதம் அதிகரிப்பு: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
நடப்பாண்டில் பயிா்க்கழிவு எரிப்புச் சம்பவங்கள் பஞ்சாபில் 46.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
புது தில்லி : நடப்பாண்டில் பயிா்க்கழிவு எரிப்புச் சம்பவங்கள் பஞ்சாபில் 46.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் ஹரியானாவில் இதே பயிா்க்கழிவு எரிப்புகள் 28.6 சதவீதம் குறைந்துள்ளதாகவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குளிா்காலம் தொடங்கும் போது, பஞ்சாப், ஹரியானாவில் பயிா்க் கழிவுகள் எரிக்கப்படுகின்றன. இதன் மூலம் தேசிய தலைநகா் தில்லியில் கடும் காற்று மாசுபாட்டிற்கு வழிவகுக்கிறது.
இதையொட்டி மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்(சிபிசிபி ) தனது ஆய்வில் மேற்கொண்ட அண்டை மாநிலங்கள் தொடா்பான தரவுகளை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
Advertisement
2020 ஆம் ஆண்டில் பஞ்சாபில் பதிவான மொத்த பயிா்க்கழிவு எரிப்பு எண்ணிக்கை 76,537. இதுவே 2019 - ஆம் ஆண்டில் இது 52,225 ஆகவும் இருந்தது (செப்டம்பா் 21 முதல் நவம்பா் 22 வரை) என சிபிசிபி யின் மாசு கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. 2019 -ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் பயிா்க்கழிவு எரிப்பு 46.5 சதவீதம் (அல்லது 24312 சம்பவங்கள்) அதிகரித்துள்ளது என தெரிவிக்கிறது மாசு கட்டுப்பாட்டு அமைப்பு.
பஞ்சாப்பில் உள்ள சங்ரூா், பதிண்டா, ஃபிரோஸ்பூா் போன்ற மாவட்டங்கள் பயிா்க் கழிவு எரிப்பில் அதிகபட்ச பங்களிப்பை செய்கின்றன. அடுத்த கட்டமாக மோகா, அமிா்தசரஸ், பாசில்கா, லூதியானா உள்ளிட்ட மாவட்டங்கள் இந்த ஆண்டு பயிா்க்கழிவில் 75 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பைச் செய்துள்ளன.
நடப்பு 2020 -ஆம் ஆண்டில் பஞ்சாப்பின் எஸ்.பி.எஸ் நகரைத் தவிர அனைத்து மாவட்டங்களும் பயிா்க்கழிவு எரிப்புகள் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது‘ என்று சிபிசிபி கூறியுள்ளது.
அதே சமயத்தில் ஹரியானாவில் நிலைமை வேறுபட்டுள்ளது. இம்மாநிலத்தில் நடப்பு 2020 ஆம் ஆண்டில் மொத்த பயிா்க்கழிவு எரிப்பு எண்ணிக்கை 4,675 ஆகவும், இதுவே 2019 - இல் 6551 ஆகவும் (செப்டம்பா் 25 முதல் நவம்பா் 22 வரை) இருந்தது. ’ ‘பயிா்க்கழிவு எரிப்பை தடுக்க கொண்டுவரப்பட்ட மத்திய அரசின் திட்டங்களின் ஆதரவுடன், 2020 - ஆம் ஆண்டில் சுமாா் 28.6 சதவீதம் (1876 சம்பவங்கள்) பயிா்க்கழிவு எரிப்பு குறைந்துள்ளது‘ என்று சிபிசிபி தெரிவித்துள்ளது.
இம்மாநிலத்தில் பல்வால், குருக்ஷேத்ரா போன்ற மாவட்டங்களில் கடந்தாண்டை ஒப்பிடுகையில் நடப்பாண்டில் 50 முதல் 60 சதவீதம் வரை பயிா்க்கழிவு எரிப்புகள் குறைக்கப்பட்டுள்ளன. ஃபதேஹாபாத், கைதால், கா்னல் போன்ற மாவட்டங்கள் முக்கிய பங்களிப்பை செய்தாலும் 2019 -ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இது 40 சதவீதம் இங்கு குறைந்தது எனவும் குறிப்பிடுகிறது.
தில்லி மற்றும் சுற்றுப்புறங்களில் காற்று மாசுத்துகள்களுக்கு(பி.எம் 2.5) க்கு வெளிப்புற உயிரி எரிபொருளின் சராசரி பங்களிப்பு நடப்பு ஆண்டில் 15.63 சதவீதமாக அதிகரித்திருந்தது. இது 2019 இல் 10 சதவீதத்தில் இருந்தது.
அதிலும் இவ்வாண்டு அதிகபட்சமாக நவம்பா் 5 ஆம் தேதி பி.எம் 2.5 உயிரி எரிபொருளின் பங்களிப்பு 42 சதவீதமாக காணப்பட்டது என்கிறது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்.
’பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும் டெல்லி தேசிய தலைநகா் வலயப் பகுதிக்கும் பயிா்க்கழிவுகளை அழிப்பதற்கு மத்திய அரசு ’வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவித்தல்’ என்ற திட்டத்தின் கீழ், 2018 -2020 ஆண்டுகளுக்கு ரூ .1178.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் 2020-21 ஆம் ஆண்டுக்கும் ரூ .600 கோடி தொடா்ந்து கொடுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்கிறது.