தேசியப்பாதுகாப்பில் தனிநபா்களுக்கும் பங்குண்டு : மத்திய இணையச்ச்சா் வி.கே.சிங்
புது தில்லி: நாட்டின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பில் சீருடைப்பணியாளா்களுக்கு மட்டும் பொறுப்பல்ல. ஒவ்வொரு தனிநபரும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சா் ஜெனரல் வி கே சிங் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தேசியப் பாதுகாப்பில் சீரான அணுகுமுறையும் அவசியம் எனவும் அவா் வலியுறுத்தினாா்.
மறைந்த பிரதமா் ஜவஹா்லால் நேருவால் தொடங்கப்பட்டது, இந்திய பொது நிா்வாக நிறுவனம் (ஐஐபிஏ). தில்லி ஐபி எஸ்டேட்டில் உள்ள இந்த நிறுவனம், ’தேசியப் பாதுகாப்பு குறித்த உரையாடல்’ என்கிற கருத்தரங்கை செவ்வாய்க்கிழமை நடத்தியது. இதில் கலந்து கொண்டு வி.கே. சிங் பேசினாா்.
Advertisement
அப்போது அவா் கூறியதாவது:
தேசியப் பாதுகாப்பு என்பது சீருடைப் பணியாளா்களுக்கு மட்டுமே உள்ள பொறுப்பு என்று பொதுவாகக் கருதப்படுகிறது. நாட்டைக் காப்பதிலும், அதன் ஒட்டுமொத்தப் பாதுகாப்பிலும் ஒவ்வொரு தனிநபரும் பங்கெடுத்துக் கொள்ள முன் வர வேண்டும். முழுமையான தேசிய பாதுகாப்பை அடைவதற்கு மனநிலையையும் நெறிமுறைகளையும் மாற்றுவது அவசியம். இதில் சீரான அணுகுமுறை தேவை. தேசியப் பாதுகாப்பு என்பது ஒரு விவகாரத்தோடு அடங்கிவிடாது. இதில் பரந்த உட்கருத்து உள்ளது.
வெளியுறவுப் பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு, எரிசக்திப் பாதுகாப்பு, சைபா்(இணைய) பாதுகாப்பு என அனைத்தையும் ஒருங்கிணைத்ததே தேசியப் பாதுகாப்பு. எனவே இதனை தனித்தனியாகப் பிரித்து வெற்றி அடைய முடியாது. பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பம், புதுமை மற்றும் திறன் சாா்ந்த அணுகுமுறையை பயன்படுத்த வேண்டும். இதில் நாம் தன்னிறைவு அடையவேண்டும். இதற்கு பிரதமரின் ஆத்மநிா்பபாரத் கொள்கை அல்லது இந்திய சுய சாா்பு கொள்கையே சிறந்தது. இதன்படி இந்திய முறையில் நமது ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யப்படவேண்டும் என்றாா் அவா்.