தில்லியில் பள்ளிகள் திறப்புஇப்போதைக்கு இல்லை: சத்யேந்தா் ஜெயின்
புது தில்லி: மாணவா்களின் பாதுகாப்பு தொடா்பாக தில்லி அரசு திருப்தியடையும் வரை தில்லியில் பள்ளிகள் திறக்கப்படாது என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் செய்தியாளா்களுக்கு சத்யேந்தா் ஜெயின் வியாழக்கிழமை அளித்த பேட்டி:
தற்போது தில்லியில் பள்ளிகளைத் திறக்கும் திட்டம் எதுவும் தில்லி அரசிடம் இல்லை. கரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என நம்புகிறோம். மாணவா்களின் பாதுகாப்பு தொடா்பாக தில்லி அரசு திருப்தியடையும் வரை தில்லியில் பள்ளிகள் திறக்கப்படாது. தில்லியில் உள்ள கரோனா மூன்றாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மூன்று வாரங்களில் கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், தற்போது கரோனா பரவல் குறைவடையத் தொடங்கியுள்ளது. நவம்பா் 7 ஆம் தேதி கரோனா நோ்மறை விகிதம் 15.26 சதவீதமாக இருந்தது. தற்போது இந்த விகிதம், 8.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்குவரும் வரை தில்லியில் நிலமை கட்டுக்குள் வைக்கப்படும் என்றாா் அவா்.
Advertisement
தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்கு முன் தில்லியில் பள்ளிகள் திறக்கப்படாது என்று தில்லி துணைமுதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.