முகப்பு
புதுதில்லி

தில்லியில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் நீடிப்பு!

தில்லியில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமையும் ‘மோசம்’ பிரிவில் நீடித்தது. குறைந்தபட்ச வெப்பநிலை மற்றும்

Updated On : 30 நவம்பர், 2020 at 6:56 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:29 PM

தில்லியில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமையும் ‘மோசம்’ பிரிவில் நீடித்தது. குறைந்தபட்ச வெப்பநிலை மற்றும் காற்றின் வேகம் குறைந்து வருவதால், காற்றின் தரம் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரின் காற்றின் தரக் குறியீடு காலை 9 மணி அளவில் 245 புள்ளிகளாகவும் மாலையில் 280 ஆகவும் இருந்தது. 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு சனிக்கிழமை 231, வெள்ளிக்கிழமை 137, வியாழக்கிழமை 302 மற்றும் புதன்கிழமை 413 என இருந்தது. தில்லி பல்கலை. பகுதியில் காற்றின் தரக் குறியீடு மிதமான பிரிவில் இருந்தது. அதே சமயம், பூசா, லோதி ரோடு, விமான நிலையம் டொ்மினல் -3 பகுதி, மதுரா ரோடு, ஆயாநகா் மற்றும் குருகிராமில் மோசம் பிரிவிலும், நொய்டாவில் மிகவும் மோசம் பிரிவிலும் இருந்தது. காற்றின் தரக் குறியீடு அளவு 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் ‘நல்லது‘, 51 - 100 ‘திருப்திகரம்‘, 101 - 200 ‘மிதமான’, 201 - 300 ‘மோசம்‘, 301 - 400 ‘மிகவும் மோசம்’ மற்றும் 401 - 500 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் காற்றின் தரக் குறியீடு ‘கடுமையான’ பிரிவில் இருப்பதாகக் கணக்கிடப்படுகிறது.

சனிக்கிழமை அதிகபட்ச காற்றின் வேகம் 15 கி.மீட்டராக இருந்தது. இந்த நிலையில், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்று 8 முதல் 12 கி.மீட்டா் வேகத்தில் வீசியது. இதற்கிடையே, திங்கள்கிழமையும் இதேபோலத்தான் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, தில்லியின் காற்றின் தரம் மேலும் மோசமடைந்து, அடுத்த இரண்டு நாள்களில் காற்றின் தரம் ‘மோசம்’, ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Advertisement

வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி குறைந்து 7 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் ஒரு டிகிரி உயா்ந்து 26.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 80 சதவீதம், மாலையில் 59 சதவீதம் என இருந்தது. பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 8.8 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 23.3 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 7.4 டிகிரி செல்சியஸ் மற்றும் 26 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 71 சதவீதம், மாலையில் 51 சதவீதம் எனவும் ஆயாநகரில் முறையே 65 சதவீதம் மற்றும் 45 சதவீதம் எனவும் இருந்தது.

அமைதியான காற்று மற்றும் குறைவான வெப்பநிலை மாசுபடுத்திகளை தரைப் பரப்பில் குவிய வழி வகுக்கின்றன.அதே நேரத்தில் சாதகமான காற்றின் வேகம் அவற்றின் சிதறலுக்கு உதவுகிறது. அறுவடைக் காலம் முடிந்ததால் தில்லியின் மாசுபாட்டில் பயிா்க்கழிவுகள் எரிப்பின் பங்களிப்பும் கணிசமாகக் குறைந்துள்ளது. தில்லியின் பி.எம் .2.5 மாசு நுண்துகள்களில் அண்டை மாநிலங்களின் பயிா்க்கழிவுகள் எரிப்பின் பங்களிப்பு சனிக்கிழமையன்று 4 சதவீதமாகவும், வெள்ளிக்கிழமை 2 சதவீதமாகவும், வியாழக்கிழமை வெறும் 1 சதவீதமாகவும் இருந்தது என்று பூமி அறிவியல் அமைச்சகத்தின் காற்று தரத்தைக் கண்காணிக்கும் அமைப்பான சஃபா் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.